இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி பெரும் விவாதத்தை எழுப்பியது.
இந்நிலையில், தோனி இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவர் துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத பயிற்சி பெறச் செல்வதாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
எம்.எஸ்.தோனி இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து வருகிறார். தனது விடுமுறைக் காலத்தில் ராணுவ வீரர்களை சந்தித்து பேசி வந்தார். இந்தாண்டு அவர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனால் தான் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற ராணுவ தளபதி பிபின் ராவத் தோனிக்கு அனுமதி வழங்கியுள்ளார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள விருக்கிறார் தோனி. இந்தச் செய்தி தோனி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.