
இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கைத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நீதிபதிகள், "நடப்பு கல்வியாண்டிலேயே 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை அவசர அவசரமாகக் கொண்டு வரும் திட்டத்தைக் கைவிட வேண்டும். போதிய அவகாசம் தராமல் ஏன் இந்தத் திட்டம் இவ்வளவு அவசரமாக அமல்படுத்தப்படுகிறது? இதனால் மாணவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தமும் பாதிப்புகளும் ஏற்படும்.
எனவே, மாணவர்கள் இதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக, அடுத்த ஆண்டு முதல் இதனை அமல்படுத்தத் திட்டமிடலாம்” என ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், இது குறித்த இறுதி முடிவினை ஒன்றிய அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமும் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






