
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூக நீதித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதம் தொடங்குவதற்கு முன்பு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் பதிலுரைக்குப் பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிடுவதால், முக்கியமான அறிவிப்புகள் குறித்துப் பேரவையில் விளக்க முடியவில்லை. இதனால், புதிய அறிவிப்புகளுக்குப் பிறகே அமைச்சர்களின் பதிலுரை இருக்கும்" என அறிவித்தார்.
இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "படம் நன்றாக இருந்தால் கிளைமாக்ஸ் பார்ப்பார்கள். சபாநாயகர் அவர்களே, நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்தப் படம் ஓடாது என்பது போலவே இருக்கிறது" எனக் கூறினார்.
இதற்கு முன்னதாகப் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான பதிலுரைக்கு முன்பே புதிய அறிவிப்புகளை வெளியிடுவது, படத்தின் கிளைமாக்ஸை முன்பே போடுவது போல் இருக்கிறது. போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டால் என்ன, படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன என்பதுபோல் உள்ளது உங்கள் அறிவிப்பு" எனக் கிண்டலாகக் கூறினார்.
இருந்தும், அமைச்சர்களின் புதிய அறிவிப்புகளுக்குப் பிறகே மானியக்கோரிக்கை மீதான பதிலுரை விவாதம் நடைபெற்றது.






