
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். வரலாற்றில் இல்லாத வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைவிட, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகள்தான் அவைக்குறிப்பில் இருந்து அதிகமாக நீக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சியினர் ஒரு கேள்வி கேட்டால், அமைச்சர்கள் ஆச்சரியப்படும் வகையில் பதில்களைக் கொடுக்கிறார்கள்; இப்போது பாடல்களைக்கூடப் பாடுகிறார்கள். இது சட்டப்பேரவையா அல்லது பாடல் நிகழ்ச்சியா என்றே தெரியவில்லை.
சில தினங்களுக்கு முன்பு பேரவையில் பேசிய முதலமைச்சர், தனது மேஜையில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதனைத் திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளை நோக்கிக் குற்றம் சாட்டியுள்ளார். அந்தத் தடித்த கோப்புகளைத் தயவுசெய்து திறந்து பாருங்கள்; அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். எதற்காகப் பயப்படுகிறீர்கள்? ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்? இதையே கடந்த 3 மாதங்களாகச் சொல்லி வருகிறீர்கள். அந்தப் கோப்புகளைத் திறப்பீர்களா அல்லது அதற்கு ஏதேனும் நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
முதலமைச்சருக்கு நான் Open Challenge வைக்கிறேன். அவர் வைத்திருக்கும் கோப்புகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். அதை விடுத்து, சினிமாப் படம் போலச் சட்டப்பேரவையில் ‘பஞ்ச் டயலாக்’ பேச வேண்டாம். இதுபோன்ற உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் இயக்கம் தி.மு.க. கிடையாது.
சட்டப்பேரவை நிகழ்வுகளை முதன்முதலில் நேரலையில் ஒளிபரப்பியது தி.மு.க. ஆட்சியில்தான். அன்றைய பேரவையில் ஒவ்வொரு நாளும் 10 கேள்விகள் எடுக்கப்பட்டுப் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போது கேள்வி நேரம் என்ற ஒன்றே இல்லாத நிலையில்தான் இந்த அரசின் செயல்பாடு உள்ளது.
சட்டப்பேரவை நேரலையின்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களின் தவறான, விதிமீறிய பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், அவை சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’களாக வந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.






