
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழக வெற்றிக் கழத்தின் சட்டமன்ற உறுப்பினர் கபிலுக்கு சென்னை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் ஒரு கடைக்குள் புகுந்து ஒரு சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைக் கண்ட தினமலர் செய்தியளார்கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன் அதை படம் பிடித்துள்ளனர்.
அப்போது தாக்குதலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவருடன் வந்த நபர்கள் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்த நிகழ்வு சோளிங்கர் உதவி காவல் ஆய்வாளர் முனீர் பாஷா முன்னிலையிலேயே நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதலைத் தடுக்கவோ, செய்தியாளர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்கவோ அவர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறை சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்ததாக கூறப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்திலும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
செய்தியாளர்கள் தங்களது தொழில்முறை கடமையை மட்டுமே மேற்கொண்ட நிலையில், அவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை தாக்குதல் ஊடகச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களின் மீதும் நடத்தப்பட்ட நேரடி தாக்குதலாகும்.

செய்தியாளர்களை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசியல் பதவியில் இருப்பவர்கள் என்பதற்காக சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. சட்டமன்ற உறுப்பினர் கபில் உள்ளிட்ட தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள்மீது கொலை முயற்சி உள்ளிட்ட பொருத்தமான கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
மேலும், செய்தியாளர்களின் செல்பேசிகளை பறித்து, செய்திக் காட்சிகளை அழித்த செயலுக்காக ஆதாரங்களை அழித்தல், செய்தி சேகரிப்பைத் தடுத்தல் மற்றும் ஊடகப் பணியில் குறுக்கீடு செய்தல் தொடர்பான சட்டப்பிரிவுகளையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் காயமடைந்த பத்திரிகயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தவிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறது.
பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை அடக்க முடியாது. ஊடகச் சுதந்திரத்தை அச்சுறுத்தும் எந்தவொரு வன்முறையையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பதை உறுதிபடி தெரிவித்துக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.






