
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை எதிர்த்துப் பேசிய விஜய், இன்று முதலமைச்சராக ஆன பிறகு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வாய்மூடிக் கிடக்கிறார்.
டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது பா.ஜ.க பாசிச அரசு தடியடி நடத்தியதைக் கண்டித்து மூச்சுகூட விட மறுக்கிறார்.அதைவிடக் கொடுமை என்னவென்றால், தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களைக் காவல்துறையை ஏவி முடக்கப் பார்க்கிறார்.
பாசிசம் பாயசம் என வசனம் பேசிய விஜய், இன்று தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பது தான் "ஜனநாயகமா" CM sir? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"இந்தியாவில் மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்களில் நீட் போன்ற தேர்வு நடைபெறுவதை எந்த மாநில அரசும் எதிர்ப்பதில்லை. அதுபோல் மாநில அரசுகளின் மாநில வரிப்பணத்தில் உருவாக்கி இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதை மறைந்த தலைவர் கலைஞர் முதல் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரை தொடர்ந்து 10 ஆண்டு காலமாக எதிர்ப்பதோடு, தமிழக சட்டமன்றத்திலும் நீட் தேவையில்லை என இரண்டு முறை ஏக மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்த பெருமை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.
இந்த உண்மையை புரிந்து கொண்ட இந்திய இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறவழியில் போராடி வருவதையும், ஒன்றிய அரசு காட்டுமிராண்டித்தனமாக அடக்கி, ஒடுக்குவதையும் த.வெ.க அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் CM sir ?
தமிழ்நாட்டில், டெல்லி-நீட் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் மாணவர்கள், இளைஞர்களை கொடூரமாக அடக்கி, ஒடுக்கி கைது செய்வது ஏன் ? அவர்களை மெரினாவில் போராட அனுமதிக்காதது ஏன் ? பாஜக ஆட்சிக்கு காட்டும் #விசுவாசமா ?
இன்று இந்திய இளைஞர்கள் ஒன்றிய அரசின் அடக்குமுறையை தாங்கி பலநாள் உணவு, உறக்கமின்றி, உயிரை பணயம் வைத்து ஜனநாயக முறையில் போராடி வருவதை தமிழ்நாட்டில் கண்டு கொள்ளாத த.வெ.க அரசு இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து கொண்டாடி மகிழ்வது வெட்கக்கேடானது.
"ஜனநாயகன் " பட வசூலுக்காக கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை கேட்டு பெறாமலும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க துணிவு இல்லாமலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்வதுதான் வாக்களித்த மக்களுக்கு தாங்கள் காட்டும் பிரதிபலனா?
தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்பது போல் காங்கிரஸ் -க்கும் பாஜகவுக்கும் விசுவாசம் காட்டுவதற்காக, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பது தான் "ஜனநாயகமா " CM sir ? என கேள்வி எழுப்பியுள்ளார்.






