
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் வந்த பின்பும் அவதூறுகளுக்கு எப்படி பஞ்சம் இல்லையோ, அதே போல் தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பும், அமைத்த பின்பும் போலி செய்திகளுக்கு அளவே இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த போலி செய்திகளை த.வெ.க.வினர் மட்டும் பரப்பவில்லை. அதன் தலைமையும் சேர்ந்து பரப்புகிறது. அதோடு இதனை பொதுவெளியில், அதுவும் செய்தியாளர்களிடமே கூறி வருகிறார்கள் த.வெ.க.வின் முக்கிய அடையாளங்கள். த.வெ.க.வினரின் ஒவ்வொரு பொய்யையும் முறியடித்து, மக்களிடம் உண்மையை சொல்லும் வேலையை பல சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சியினர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பென் நிறுவனத்தின் நிறுவன தலைவரான சபரீசன் மீது த.வெ.க அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில், அமைச்சர்கள் இருவரும் சபரீசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சபரீசன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில் உள்ள விவரம் வருமாறு :-
சமூக பொருளாதார ஆராய்ச்சி மற்றும் அரசியல் ஆலோசனை பணிகளை மேற்கொள்ளும் பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர் எனப்படும் பென் நிறுவனத்தின் நிறுவன தலைவரான சபரீசன் சார்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.அஸ்வின் பிரசன்னா, தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக குறித்து, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் தவெக நிர்வாகிகள் விமர்சித்து வந்துள்ளனர்; திமுக தலைவரும், தமிழக முதலமைச்சராக இருந்தவருமான மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற ஒரே காரணத்துக்காக சபரீசன் மீதும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய, உண்மைக்கு புறமான கருத்துகளை இரண்டு அமைச்சர்களும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது நேர்மை, பொது சேவை, உண்மையான, நேர்மையான, அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளின் மூலம் தனிப்பட்ட, சமூக, தொழில் ரீதியான வாழ்க்கை ஆகியவற்றில் களங்கமற்ற நற்பெயரை கொண்டுள்ள சபரீசனுக்கு எதிராக, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் ஜூன் 25ஆம் தேதி நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளன என வக்கீல் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரீசன் குறித்து இரு அமைச்சர்களும் ஊடகங்களில் தெரிவித்த கருத்துகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்; அதே ஊடகங்கள் முன்பாக சபரீசனிடம் இரு அமைச்சர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்; சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் சபரீசனுக்கு எதிராக அவதூறான, இழிவான, உள்நோக்கத்துடன் கூடிய கருத்துகளை வெளியிட மாட்டோம் என நிபந்தனையற்ற உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை 15 நாட்களுக்குள் செய்யத் தவறினால், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றமாக கருத்தப்படும் இந்த அவதூறு கருத்துக்கள் குறித்து, சட்டரீதியான நடவடிக்கையை இரு அமைச்சர்களும் சந்திக்க நேரிடும் என சபரீசன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.






