
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கடந்த 6 நாட்களாக ஆதரவு கோரி ஆளுநர் மாளிகைக்கும், பல்வேறு அரசியல் கட்சி அலுவலகங்களுக்கும் விஜய் நேரில் சென்று வருகிறார்.
இதற்கிடையே, அ.ம.மு.க சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகத் த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சியில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. த.வெ.க சமர்ப்பித்த ஆதரவுக் கடிதம் உண்மையானது அல்ல என்று கூறி, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆளுநரைச் சந்தித்துப் புகார் கடிதம் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் இது குறித்துக் கூறுகையில்"த.வெ.க யாரை ஏமாற்றுகிறது? தங்கள் கட்சி எம்.எல்.ஏ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல; அந்த வீடியோ 'AI' மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாகக் கூட இருக்கலாம். அவர் கையெழுத்திட்டது உண்மை என்றால், அந்த அசல் கடிதம் எங்கே?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "ஊழலை ஒழிக்கப்போவதாகச் சொன்ன விஜய்தான், இன்று முதலமைச்சராவதற்காக மோசடி Fraud வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். போலி ஆவணங்களைக் கொடுத்து வேலை வாங்குவதுபோல், முதலமைச்சராகிவிடலாம் என்று அவர் நினைக்கிறார். ஆட்சி அமைப்பதற்காக இத்தகைய முறைகேடான செயல்களில் ஈடுபடும் விஜய், ஒருவேளை ஆட்சி அமைத்துவிட்டால் அது தமிழ்நாட்டிற்குப் பேரழிவாக முடியும்" எனத் தெரிவித்தார்.






