
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் அப்பாவு அவர்களை ஆதரித்து, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "உங்கள் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அப்பாவு அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தைச் சபாநாயகராக இருந்து சிறப்பாக வழிநடத்தியவர். அவர் அனுமதி அளித்தால்தான் முதலமைச்சரும் அமைச்சர்களுமே சட்டமன்றத்தில் பேச முடியும். இந்தத் தேர்தலில் அப்பாவு அவர்களுக்கு 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ வேண்டும். ஆனால் மணிப்பூரில் பா.ஜ.க மதக்கலவரத்தை உருவாக்கி, இன்றுவரை அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்க முடியாமல் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியோடு மக்கள் முகாம்களில் தங்கி வருகின்றனர்.
இந்நிலை தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதால்தான் தொழில் முதலீடுகள் இங்கே குவிகின்றன. திராவிடமாடல் சீரான நிர்வாகம் தொடர நாம் இந்தத் தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி செல்போன் தருவதாகக் கூறினார், ஆனால் யாருக்கும் வழங்கவில்லை. ஆனால், நம் முதல்வர் அவர்கள் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு 35 லட்சம் இலவச மடிக்கணினிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இது இலவசமல்ல, மாணவர்களின் எதிர்காலத்திற்கான முதலீடு.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாகத் திகழ்கிறது. ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். தற்போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், இந்தத் தொகையை ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. என தெரிவித்துள்ளார்.






