
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA 2) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, தாம்பரம் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அவர் வரும் தேர்தல் பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி முகவர்கள் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் விரிவான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
இதில் பேசிய தா.மோ. அன்பரசன், " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறார். 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை வெறும் 5 ஆண்டுகளில் செய்து முடித்து, தமிழ்நாட்டை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை நிறைவேற்றியதோடு, அறிவிக்காத பல மக்கள் நலத் திட்டங்களையும் ஏழை, எளிய மக்களுக்குச் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரே மாநிலக் கட்சியாக திமுக திகழ்கிறது" என்றார்.






