
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை பின்வருமாறு :-
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்குக் கவலையும் இருந்தது, அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்தப் பொறுப்பை நான் எப்படிச் செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது.
முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து, மோசமான நிலையை அடைந்திருந்தது. அதை சரி செய்தாக வேண்டும். அடுத்து, நமக்கு மேலிருக்கக்கூடிய ஒன்றிய அரசு அது ஒத்துழைக்காத, ஒரு ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டுமென்பதுதான் எனது கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள். இடியாப்பச் சிக்கல் என்று சொல்வார்களே, அப்படியான சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதனால்தான் கவலை கொண்டவனாக நான் இருந்தேன்.

ஆனால், இப்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் சொல்றேன்; நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொல்லவேண்டுமென்றால் மிக, மிக, மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். என்னுடைய இலக்கில் நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகம் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கின்றார்கள். அதற்கு காரணம் நம்முடைய திட்டங்கள், நாம் செய்து கொண்டிருக்கக்கூடிய சாதனைகள், இவையெல்லாம்தான் என் மகிழ்ச்சிக்குக் காரணம்.
அடுத்து, இன்னும் பெருமையுடன், கான்ஃபிடன்டா சொல்கிறேன். நாங்கள் அமைக்கப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும். ஆட்சி செய்திருக்கக்கூடிய ஐந்தாண்டுகள், வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
ஆறாவது முறை ஆட்சியமைந்தபோது, அது விடியல் ஆட்சியாக அமையுமென்று சொன்னோம். அந்த விடியலை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம். கோடிக்கணக்கான மக்கள் மனங்களிலும், முகங்களிலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் நான் பார்க்கின்றேன். அப்படிப்பட்ட விடியல் ஆட்சியின் மாபெரும் சாதனைத் திட்டங்களில் முக்கியமான சிலவற்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.
• ஆட்சிப் பொறுப்பேற்றதும், நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்துக்குதான்! இந்தப் பயணங்களால் மாதந்தோறும்
800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கின்றார்கள். இதன் மூலமாக, 2021 மே மாதத்திலிருந்து இப்பொழுது வரை தோராயமாக 60 ஆயிரம் ரூபாய் வரை சேமித்திருக்கின்றார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் பொருளாதார பலத்தை இந்தத் திட்டம் வழங்கியிருக்கிறது.

• அடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! ஒரு கோடியே
31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகின்றோம். இந்தத் திட்டத்தில் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 29 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கின்றோம். அந்தப் பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கின்ற மாதாந்திர சீர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள்.
• இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு 2 கோடியே 23 இலட்சம் குடும்பங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயை வழங்கினோம். தமிழ்நாடே மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியது. தமிழ்நாடு முழுவதும் 20 இலட்சத்து 59 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் தினமும் காலையில் சூடான, சத்தான, சுவையான உணவை சாப்பிடுகின்றார்கள்.
• நான் முதல்வன் திட்டத்தில் 48 இலட்சத்து 65 ஆயிரம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
• புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 12 இலட்சம் மாணவ, மாணவியர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.
• 2003 முதல் 2021 வரை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 6 மாணவர்கள் மட்டுமே பயனடைந்திருக்கின்றார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 385 மாணவர்களுக்கு 162 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள்.
அரசு ஊழியர்களுடைய 23 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றோம். நாம் ஆட்சிக்கு வந்தபோது அரசு ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை இப்பொழுது 58 விழுக்காடு எனுமளவுக்கு உயர்த்தி வழங்கியிருக்கோம்.
• 2 இலட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள்,
• 14 புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்.
• 2 கோடியே 56 இலட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள்.
• "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டத்தில் சாலை விபத்துக்குள்ளான 5 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு 483 கோடி ரூபாய்க்கு காப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது.
• கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு
1 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
• 2 இலட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்.
• 22 இலட்சத்து 71 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.
• 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு.
• 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு.
• 12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு.
• தாயுமானவர் திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 27 இலட்சத்து 55 ஆயிரம் பேருக்கு வீடு தேடி
ரேஷன் பொருட்கள்.
• 5 ஆயிரத்தி 700 கோடி ரூபாய் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கீடு.
• சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற
200 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.
• கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை.
• மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
• சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.
• திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.
• முதல்வர் படைப்பகங்கள்.
• 38 மாதிரிப் பள்ளிகள்.
• 37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.
• 10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்
• 19 தோழி விடுதிகள்.
• 141 மினி ஸ்டேடியங்கள்.
• பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆயிரம் கோடி ரூபாயில் தொல்குடி திட்டம்.
• ஆயிரம் கோடி ரூபாயில் அயோத்திதாசர் பெயரிலான ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்.
• 6 ஆயிரத்தி 45 கோடி ரூபாயில் வடசென்னை
வளர்ச்சித் திட்டம்.
• நெடுஞ்சாலைத் துறை மூலமாக, 24 ஆயிரத்தி 774 கிலோமீட்டர் நீள சாலைகள் 180 உயர்மட்டப் பாலங்கள்.
• 20 ஆயிரத்து 484 கிலோ மீட்டர் தூரத்துக்கு
கிராமச் சாலைகள் மேம்பாடு.
• 121 தடுப்பு அணைகள்
• 101 அணைக்கட்டுகள்
• மிக நீளமான, G.D. நாயுடு மேம்பாலம்
• மிக நீளமான, வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்
• 87 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம், சுமார் 3 கோடி மக்கள் பயன்பெறும் 75 இலட்சம் வீட்டு இணைப்புகள்.
• விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட, முக்கியத் தலைவர்களுக்கு 23 மணிமண்டபங்கள் - 70 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
• சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு.
• கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகம் சீரமைப்பு.
• கீழடி அருங்காட்சியகம்.
• பொருநை அருங்காட்சியகம்.
• கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.
• கலைஞர் நூற்றாண்டு பூங்கா.
• கோவையில் செம்மொழிப் பூங்கா.
• தொல்காப்பிய பூங்கா சீரமைப்பு.
• 39 கோடி ரூபாயில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட உத்தரவு.
• 10 கோடி ரூபாயில் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. சொல்வதற்கு நேரம்தான் இல்லை.

இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், ஒரு சாதனை செய்தால்,
அதை மிஞ்சுவதாக இன்னொரு சாதனை வரும்; அடுத்து அதை விஞ்சுவதாக மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல சாதனைகளைப் படைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.
நான் பொறுப்பேற்று, இந்த அரசு பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது. இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 15 ஆயிரத்து 117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு இருக்கிறேன்; சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதிலேயும், 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44 இலட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டியது, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தது என எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தோடு என்னால் சொல்ல முடியும்.
கடந்த 5 ஆண்டுகளில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான்! மக்களுக்காக திட்டங்களைத் தீட்டினான்! மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்! இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை; எல்லாமே உண்மை! இதை எதிர்க்கட்சிகளால் தாங்கிகொள்ள முடியாது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், தமிழ்நாட்டினுடைய நலனுக்காகச் செயல்பட வேண்டிய ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு எதிராக, மக்களுக்காகப் பாடுபடும் நமக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதுதான் வேதனையா இருக்கிறது. மாண்புமிகு ஆளுநர் அவர்கள், தான் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் சென்றது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால், அவர் வகிக்கின்ற பதவியை, அவரே அவமானப்படுத்துகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே, ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு கேவலப்படுத்துற செயலாக இருக்கிறது. அதிலேயும், கடந்த மூன்று ஆண்டுகளாக நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தயாரித்து கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது, மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்தப் பேரவை கருத வேண்டியுள்ளது.

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. கோடிக்கணக்கான மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அரசு இது. ஆளுநர் உரை தொடங்கும்போது ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடுவதும் - முடிவுறும்போது ‘நாட்டுப்பண்’ பாடுவதும்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய மரபு. முதலிலேயே ‘நாட்டுப்பண்’ பாடவில்லை என்பதையே திரும்பத் திரும்ப குற்றச்சாட்டாக அவர் சொல்லிக்கொண்டு வருகிறார். இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெரும் மதிப்பை, மரியாதையைக் கொண்டுள்ளவர்கள் நாங்கள்.
தேசிய ஒருமைப்பாட்டிலேயும், நாட்டுப்பற்றிலேயும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை நாங்கள் என்பதை, இந்தப் பேரவை உறுப்பினர்கள் சார்பாக மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அழுத்தந்திருத்தமாக நான் சொல்லிக்கொள்ள விரும்புறேன். யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்துப் பாடம் எடுக்கின்ற நிலைமையில நாங்களும் இல்லை; தேசபக்தி பாடம் எடுக்கும் அளவுக்கு இந்த தேசத்துக்காக அவர்கள் போராடியவர்களும் இல்லை. ஜனநாயக தேசத்தின் அரசமைப்பு மாண்பை, எதேச்சாதிகாரத் தன்மையுடன் மாற்ற நினைப்பவர்கள் தான், இன்றைய காலக்கட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யாரென்று
நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, நம்முடைய எழும்பூர் தொகுதி உறுப்பினர் திரு.பரந்தாமன் அவர்கள் தொடங்கி, நிறைவாக மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் வரை பேசியிருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேச வேண்டிய நான் இன்றைக்கு ஆளுநருக்கு விளக்கம் அளித்துப் பேசும் நிலையில் இருக்கிறேன்.
இது பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இன்னும் சொல்லப் போனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அம்மையார் ஜெயலலிதா அவர்களும் எதிர்கொள்ளாத நெருக்கடி இது. அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள்கூட இப்படி இல்லை. முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை. அந்த வகையில், அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும், சோதனைகள் எனக்குப் புதிதல்ல; சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். என்னைச் சீண்டிப் பார்ப்பவர்கள், மனதிற்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை எதுவும் செய்யாது.

மாண்புமிகு ஆளுநர் அவர்கள், தன்னுடைய உரையை வாசிக்காமல் வெளியேறியது ஏன் என 13 குற்றச்சாட்டுகளோடு ஒரு அறிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கிறது. நான் அவருக்குச் சொல்ல விரும்புவது, கடந்த நிதியாண்டில்,
11.19 விழுக்காடு அளவுக்கு நாட்டிலேயே உயரிய பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதைச் சொல்வது, நாங்கள் அல்ல. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை. ஆளுநர் கேள்வி கேட்க வேண்டுமென்றால், அவரை இங்கே அனுப்பி வைத்த ஒன்றிய அரசைத்தான் கேட்க வேண்டும். இன்னும் அவருக்கு நான் சில புள்ளிவிவரங்களைச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 17 இலட்சத்து 23 ஆயிரத்து 698 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் 3 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய். இது தேசிய சராசரியை விட 1.74 மடங்கு அதிகம். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 98.3 விழுக்காடு அறிவியல் ஆய்வக வசதிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஆனால், அகில இந்திய அளவில் 50 விழுக்காடு பள்ளிகளில் தான் இந்த வசதி இருக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஒன்றிய அரசின் தரவரிசையில், தலைசிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் 33 கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கிறது. மாநில அரசுகளால் நடத்தப்படும் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில்
10 பல்கலைக்கழகங்கள் நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கிறது. நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில், தமிழ்நாடு 788 புள்ளிகளோடு, இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையாகத் தாக்கல் செய்திருக்கிறது. சமூக முன்னேற்றக் குறியீடு என்று இதற்குப் பெயர். பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது, தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலம் என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்கள் தொகை 11.2 விழுக்காடு. ஆனால், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் 1.43 விழுக்காடு மக்கள்தான் இருக்கிறார்கள். அதையும் இல்லாமல் ஆக்குவதற்கு, தாயுமானவர் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்,
ஐ.நா. அமைப்பின் விருதைப் பெற்றிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான். புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவதில் Best Performer State. Startup தரவரிசைப் பட்டியலில், 2018-ல் கடைசியில் இருந்த தமிழ்நாடு 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்திருக்கிறது.
ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், இந்தியாவிலேயே தமிழ்நாடு
80.89 புள்ளிகளுடன் முதலிடம். மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் 41.23 விழுக்காடு பெற்று நாட்டிலேயே முதன்மை மாநிலம்.
தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஆகிய பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம். ஒட்டுமொத்த நாட்டின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 38 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த, 20 ராம்சார் தளங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித் திறனில் முதலிடம். மக்காச்சோள உற்பத்தித் திறனில் இரண்டாம் இடம்.
சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரைக்கும், கடந்தகால அதிமுக ஆட்சியோடு ஒப்பிடுகையில், கொலைகள் - ஆதாயக் கொலைகள் - வழிப்பறித் திருட்டு - பாலியல் வன்கொடுமைகள் என்று எல்லாமே பெருமளவில் குறைந்திருப்பதை புள்ளிவிவரங்கள் உறுதியாக்குகின்றன.
அதிக அளவு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த மாநிலமாக இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடம்.
69 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.
நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது 73-ஆக இருந்த
பேறுகால இறப்பு விகிதத்தை 40-ஆகவும், குழந்தை இறப்பு விகிதத்தை 10.4-லிருந்து
6.9-ஆகக் குறைச்சிருக்கோம்.
மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசால் தமிழ்நாடு விருது பெற்றிருக்கிறது.
சிறந்த நீர் மேலாண்மைக்காக தேசிய அளவில் மூன்றாம் இடம்.
காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
காகிதம் இல்லா சட்டமன்றத் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியதற்காக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் விருது வழங்கி இருக்கிறது.
உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காக தமிழ்நாட்டுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
மாநில கூட்டுறவு வங்கியின் சிறந்த சேவைக்காக
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே விருது வழங்கியிருக்கிறார்.

இப்படி ஒன்றிய அரசிடமிருந்து மட்டும் தமிழ்நாடு
65-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் ஆளுநர் விமர்சிக்கிறார் என்றால் அவருடைய பார்வைதான், பழுதுபட்ட பார்வையாக இருக்கின்றது.
நமது அரசு செய்து கொண்டிருக்கிற திட்டங்களைப் பார்த்து, கேட்டு, அவற்றைத் தங்களுடைய மாநிலங்களிலேயும் செயல்படுத்த பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகாரிகள் வந்து தெரிந்து கொண்டு போகிறார்கள். ஏன், நம்முடைய திட்டங்களை ஒன்றிய அரசே "அடாப்ட்" பண்ணி நாடு முழுக்க செயல்படுத்துகிறார்கள். நம்மை விமர்சிக்கின்ற ஆளுநருக்கு, இவையெல்லாம் மட்டும் தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. இங்கே மதச்சண்டை இல்லை. சாதிச்சண்டை இல்லை. கும்பல் வன்முறை இல்லை. தொடர் வன்முறை இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.
இந்தச் சாதனைகளின் வரிசையில் மேலும் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புறேன்.
முதல் அறிவிப்பு:
‘கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்' கீழ் ஏற்கெனவே 2 இலட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
1 இலட்சம் வீடுகள் கட்டப்படும்.
இரண்டாவது அறிவிப்பு:
கிராமப்புறப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற ஊரகச் சாலைகளை மேம்படுத்துகிற ‘முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், 8 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 484 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக, ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு:
ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும்
‘சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ், ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும்
50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்' கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1 இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான விழா வரும் 4-02-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த அறிவிப்பு:
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும்.
மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.
அடுத்த அறிவிப்பு:
அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
அவர்களுடைய அடுத்த முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புறேன்.
அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
கடந்த தேர்தலின்போது யாரும் கொடுக்காத வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்தோம். முடிந்தளவுக்கு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும் இருக்கின்றோம்.
"உங்களால் நிறைவேற்ற முடியாதென்று" சவால் விடப்பட்ட வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றிக்காட்டியிருக்கின்றோம்.
"இவர்கள் செய்யவேமாட்டார்கள்" என்று சொல்லப்பட்ட வாக்குறுதிகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப் போக்குவதற்கு அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.
பெரிய நகரங்களுக்கு மட்டும்தான் தொழிற்சாலைகளா? பாலங்களா? சாலைகளா? நூலகங்களா? கல்லூரிகளா? உள்கட்டமைப்பு வசதிகளா? என்று சலிப்புடன் கேட்டதை மாற்றி, அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்தையும் கொண்டு சென்றிருக்கின்றோம்.

இவை அனைத்திலும் சமூகநீதியை, சமநீதியை நிலைநாட்டியிருக்கின்றோம். இவையனைத்தும் என்னால்தான் ஆனதென்று கர்வம் கொள்பவன் அல்ல நான். மூத்த அமைச்சர்கள், நம்முடைய துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் பங்களிப்பு இல்லாமல் இதைச் செயல்படுத்தியிருக்க முடியாது. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கிய இங்கே இருக்கின்ற இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை. அதுமட்டுமல்ல, தலைமைச் செயலாளர் தொடங்கி காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வரை அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்கிறது.
தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதருக்கும் அனைத்துத் திட்டங்களும் சென்று சேருவதை உறுதி செய்கின்றோம். ‘ஊர் கூடித் தேர் இழுப்பதென்று’ சொல்வார்களே, அதைப்போல அரசின் ஒவ்வொரு அணுவும் மக்களுக்காக செயல்படுவதால்தான் இது சாத்தியமாயிற்று.
எனக்கு உயிரும் உணர்வுமாக இருந்து, என்னை இயக்கிக் கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்தான். எனக்கு மனவலிமை கொடுப்பதும், அனைத்து வகையிலும் தோள் கொடுப்பதும் எங்களோட தோழமைக் கட்சிகள்தான்!
ஜனநாயகத்தின் ஒரு பக்கம் ஆளும்கட்சியென்றால் இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள். மக்கள் மன்றத்தில் தேவையற்ற பல விமர்சனங்களை வைத்தாலும் இந்தச் சட்டமன்றத்தில் சில ஆலோசனைகளையும் வைத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனிவான நேரத்தில் கனிவாகவும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும், ஆசிரியராகவே செயல்பட்ட மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு துணைத் தலைவர், பேரவைச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 17 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். 5 உறுப்பினர்கள், 58 திருத்தங்களை வழங்கியிருக்கின்றார்கள். இந்த அரசுக்கு உதவுகின்ற வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல, சில கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள்.
அவையனைத்தும் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டு, அவற்றில் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும். எனவே, இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களுடைய திருத்தங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பேரவைக்கும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் சொல்வது ஒன்றுதான். நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டு தினந்தோறும் திட்டங்களைத் தீட்டி உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். இந்த 5 ஆண்டுகால உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள்தான் மீண்டும் வருவோம்! நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்!"