
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.01.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், பொங்கல் பானையில் பொங்கல் வைத்து, தலைமைச் செயலக அலுவலர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நாதஸ்வர இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்து, தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தலைமைச் செயலக அலுவலர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஆற்றிய உரை

தமிழ்நாடு முழுவதும் நாம் சமத்துவப் பொங்கலை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திடும் நோக்கத்தோடு, நம்முடைய திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது;
இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், உழைத்துக் கொண்டிருக்கிறது. உழைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொன்னால், நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்துதான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் நீங்கள் எல்லோரும் நேரம், காலம் பார்க்காமல், உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களோடு, இந்த பொங்கலை கொண்டாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மகிழ்ச்சி, உங்கள் உள்ளங்களிலும், உங்களுடைய இல்லங்களிலும், பொங்கட்டும்! பொங்கட்டும்! என்று இந்த இனிய நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்!






