
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரியும், திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்கக்கோரியும் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் ஏற்கனவே சற்று ஆறிப்போய் இருந்த நிலையில், திருக்கார்த்திகை அன்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை மீது தீபம் ஏற்ற அனுமதித்தார். ஆனால் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்துத்வ கும்பல் வேண்டுமென்றே கலவரத்தை உண்டு பண்ண முயற்சித்தனர். ஆனால் அவர்களை போலீசார் மக்கள் ஆதரவோடு விரட்டியடித்தனர்.

இதனிடையே தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து மீண்டும் மதுரை நீதிமன்றத்தில், 100 ஆண்டுகால மரபை மாற்ற முடியாது என்றும், மலையில் தீபம் ஏற்ற முடியாது என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்ட நிலையில், தீபம் ஏற்ற அனுமதித்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருப்பினும் இந்த விவகாரத்திற்கு இந்துத்வ கும்பல் பல வித வெறுப்பு கருத்துகளை பரப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்து மக்கள் கட்சி, சிக்கந்தர் தர்கா இந்து கோயிலுக்கு சொந்தமானது என்று அதன் கட்டட கலைகளை வைத்து அவதூறு பரப்பி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், TN Fact Check கண்டனம் தெரிவித்துள்ளதோடு, விளக்கமும் அளித்துள்ளது.
இதுகுறித்து TN Fact Check வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு :-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயில் என்று வதந்தி பொய்:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவின் படங்களைக் குறிப்பிட்டு கோயில் என்று பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை கடந்த 2004 ஆம் ஆண்டு “Islamic Architecture in Tamilnadu” என்ற நூலை வெளியிட்டது.

அதில், “தமிழ்நாட்டில் நூற்றாண்டுகளாகவே மசூதிகளில் தூண்கள், சுவர்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் திராவிடக் கட்டிடக் கலையின் அடிப்படையிலேயே கட்டப்பட்டு வந்துள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரப்படும் சிக்கந்தர் தர்காவிலும் கற்களால் செதுக்கப்பட்ட பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஏராளமான தூண்கள் உள்ளன. இவற்றில் கோயில் தூண்களில் இருப்பதுபோல் உருவங்கள் பொறிக்கப்படவில்லை.
இவ்வகையான தூண்கள் பழமையான மசூதிகளிலும் உள்ளதாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதவெறுப்பை பரப்பாதீர்! வதந்திகளை நம்பாதீர்!






