
தென்காசி மாவட்டம், இடைகால் அருகே சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு வந்த தனியார் பேருந்தும், தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பேருந்தினுள் இருந்த அனைத்து பயணிகளும் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், அருகாமையில் இருந்தவர்கள் அவசர ஊர்தி உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கும், கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பெண்கள் உள்பட இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து காயமடைந்த அனைவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அப்பகுதி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் பேசியிருந்தார்.

இந்த விபத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :-
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம். இடைகால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.11.2025) காலை சுமார் 11 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்பட 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.
அவர்களது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.






