
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதிக்கு லாவண்யா, ரீனா, ரிஷிகா ஆகிய மூன்று மகன்களும் அபினேஷ் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு வசந்தா உயிரிழந்துள்ளார். தொழிலாளியான கமலக்கண்ணன், கூலி வேலை சென்று தனது குழந்தைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கமலக்கண்ணனும் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். பெற்றோர்கள் உயிரிழந்தை அடுத்து 4 குழந்தைகளும் தவித்து வருகிறார்கள்.
இதுபற்றிய செய்தி அறிந்த உடனே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்குழந்தைகளை தொடர்பு கொண்டு, உங்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!
இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.
நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார்.
இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்” என தெரிவித்துள்ளார்.






