தமிழ்நாடு

சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!

“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.மு.சுமதி அவர்களிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார்.

“கலைஞரின் கனவு இல்லம்” திட்டம்

நாட்டிலேயே முதன்முறையாக ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 'குடிசையில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் 6 வருடங்களில் 8 இலட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நிலையான கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஊரக ஏழைக் குடும்பங்களின் கனவினை நிறைவேற்றும் வண்ணம் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிலேயே ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டது.

சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!

கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்ட பயனாளிகளின் தகுதித்தன்மையை உறுதி செய்து அப்பயனாளிகளுக்கு இத்திட்டதின் கீழ் வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மேற்கண்ட கணக்கெடுப்பில் இடம் பெற்று வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாத பயனாளிகளுக்கு பட்டா வழங்கியும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கியும் வீடற்ற, நிலமற்ற பயனாளிகளின் கனவை இத்திட்டம் நிறைவேற்றியுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான நோக்கம் மற்றும் திட்டத்தின் பயன்கள் விரைந்து மக்களை சென்றடையும் பொருட்டு “பயனாளிகள் தேர்வு செய்தல் முதல் தொகை விடுவித்தல்” வரையிலான அனைத்து நடைமுறைகளும் இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டதால் தகுதியான பயனாளிகள் வீட்டினை விரைந்து கட்டி முடித்திட சாத்தியமானது. தமிழ்நாடு அரசு இதற்காக முனைப்புடன் செயல்பட்டதால் இத்திட்டம் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் 2024-25 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகளும் ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்ட ஓராண்டிற்குள்ளேயே ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பொருட்டு இன்றையதினம் தென்காசியில் நடைபெற்ற அரசின் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மு.சுமதி அவர்களிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார். 

இதேபோன்று, 2025-26-ஆம் ஆண்டில், மேலும் ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, இதுநாள் வரை  16,245 வீடுகள் உடனடியாக முடிவுறும் நிலையிலும், 83,755 வீடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திலும் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் 2025-26 ஆம் நிதியாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories