தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று (செப்.27) மாலையில் கரூரில் ரசிகர்களை சந்தித்தபோது, குறிப்பிட்ட நேரத்தை கடந்து அவர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நிலையில், அவரை பார்க்க ஏராளமானோர் முண்டியடித்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பலரும் ஒருவர் மேல் ஒருவர் மோதி, கீழே தள்ளி, மிதித்து சென்ற நிலையில், அந்த கூட்ட நெரிசல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியது. தொடர்ந்து ஏராளமானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கே அவர்கள் அனைவர்க்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஒரு சிலர் உயிர் பிழைத்துள்ளனர். அதே வேளையில் அதில் பலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுவரை இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 13 ஆண்கள், 16 பெண்கள், 10 குழந்தைகள் என 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே நேற்றே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர். தொடர்ந்து போர்க்கால நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனிடையே மக்களுக்கு ஆறுதலாக இல்லாமல், மீண்டும் சென்னைக்கு திரும்பினார் விஜய்.
கரூர் பெருந்துயர் விவகாரம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் செய்தியாக வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பியதற்கு கண்டனம் குவிந்து வருகிறது.
அந்த வகையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
தவெக தலைவர் விஜய் அவர்களை இயக்குவது பாஜக தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை தந்துள்ளார்.
இத்தனை பேர் இறந்துள்ளனர் அதற்கு எந்த கவலையும் தெரிவிக்காமல், வழக்கம் போல காவல்துறை மீது வன்மத்தை கட்டமைக்க முனைகிறார். 60 ஆயிரம் பேர் நிற்க கூடிய இடத்தில் 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என காவல்துறையில் எழுதிக்கொடுத்தது யார்?
நாமக்கல்லில் பேசுவதற்கு ஒப்புக்கொண்ட நேரம் காலை 8.45. ஆனால் சென்னை விமான நிலையத்திலிருந்தே கிளம்பியது 8.45-க்கு தான். நாமக்கல்லுக்கு சேர்ந்தது 2.30 மணிக்கு வந்தடைந்தார். கரூரில் பேச வருவதாக அறிவிக்கப்பட்ட நேரம் பகல் 12 மணிக்கு.ஆனால்,வந்து சேர்ந்ததோ 7 மணிக்கு. இப்போது சொல்லுங்கள் அண்ணாமலை அவர்களே, 40 பேர் சாவுக்கும் யார் காரணம்?
இன்னும் கூட்டம் வரவேண்டும் என காலம் கடந்து போனது ஏன்? சனிக்கிழமைகளில் பரப்புரைக்கு திட்டமிட்டதற்கு விடுமுறையில் கூட்டம் கூடும் என்பதால் தானே.
அப்படியானால், குறித்த நேரத்தில் விஜய் வராமல் போனதற்கு யார் காரணம்? இத்தனை குளறுபடிகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய விஜய் அவர்களின் செயல்பாட்டை கண்டிக்காமல், அவரை காப்பாற்ற பாஜக துடிப்பது ஏன்? தானாடா விட்டாலும் தன்னுடைய சதை ஆடும் என்பார்களே, அதைப்போல விஜய்க்காக துடிக்கிறது பாஜக.