முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.9.2025) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 3 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சமூகநீதி பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 61 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படவுள்ள 8 சமூகநீதி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையும், 1989-ஆம் ஆண்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தையும், 2007 - ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககத்தையும் ஏற்படுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது.
இதனால் சமூக நீதி கொள்கைகளை நிறுவுவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
மதுரை மாவட்டம், வி.பெருமாள்பட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு 1.77 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் 2.17 கோடி ரூபாய் செலவில் 50 மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் சமூகநீதி பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம்;
என மொத்தம் 3 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்
சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்தில் 26.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் 5.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் 3.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி இசைக்கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;
ஒரத்தநாட்டில் 7.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி-II கட்டடம், ஒரத்தநாட்டில் 5.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி-I கூடுதல் கட்டடம், தஞ்சாவூரில் 5.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி கூடுதல் கட்டடம், மதுரை மாவட்டம், சாத்தமங்கலத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 2.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிக்கு கூடுதல் கட்டடம்;
என மொத்தம் 61.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 1050 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 8 சமூகநீதி விடுதிக் கட்டட கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்
அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் நலன் கருதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 18 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் இன்று 10 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.