சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கையின் மூலம் தூத்துக்குடியில் அமைய உள்ள புதிய கப்பல் கட்டுமான நிறுவனம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், "முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை வரலாறு காணாத வகையில் வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு நாளுக்கு நாள் கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழ்நாடு மென்பொருள், மின் உற்பத்திகள், வாகன உற்பத்தி, அதன் உதிரி பொருட்கள் உற்பத்தி, காலனி உற்பத்தி என பல்வேறு துறைகளில் பெரிய அளவில் முன்னணியில் திகழ்கிறது. மற்ற மாநிலங்கள் உற்பத்தியில் 10% இருந்தன என்றால் தமிழ்நாடு 40% 38 சதவீதம் என்ற பெரிய அளவிலான எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளது.
தனித்துவமான முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் செமி கண்டக்டர் உற்பத்தி கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டின் வரலாற்றைப் பொறுத்தவரை பண்டைய சேர, பாண்டிய, சோழ காலத்தில் இருந்து கடல்சார் வணிகத்தில் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போதுகூட பூம்புகாரில் கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து வரலாறு தொடங்குகிறது என்பதை முதலமைச்சரின் கூற்றை நிரூபிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துடன் கொச்சின் சீப்யார்டு லிமிடெட் மற்றும் மசாகோன் டாக் கடல் கட்டுமானம் லிமிடெட் என்ற இரு நிறுவனத்துடன் தலா 15,000 கோடி என 30,000 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இந்தியாவின் பாதுகாப்பு என்பது நாட்டின் காவல் அரண் தான். தென்னிந்தியாவில் குறிப்பாக தென் தமிழ்நாட்டில் இப்படி ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் அமைவது, உலக அரசியல் சூழலில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் அமையும். இந்த இரு நிறுவனங்கள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும். விரைவில் தூத்துக்குடியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. வெகு விரைவில் தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கை வெளியிடப்பட உள்ளது.
ஹச் 1பி விசா குறித்து ஒரு அறிவிப்பை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது. இதுபோன்ற உலக அளவிலான சூழல்களை சிந்தித்து தான் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் திறன்வாய்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதேபோல் ஜெர்மனி, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் தேவைப்படும் மனித வளத்தை தயார்படுத்தும் வகையில் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் பின்னலாடை பிரச்சினை குறித்து ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்திருக்கிறோம். நல்ல தீர்வு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். Sensible ஆக சிந்திக்கூடிய பெரிய முதலீட்டாளர்களால் தமிழ்நாட்டை தாண்டி சிந்திக்க முடியாது. தமிழ்நாட்டுக்கான போட்டி மற்ற மாநிலங்களுடன் அல்ல, மற்ற நாடுகளுடன் தான்.
கடந்த 4 ஆண்டுகளில் பல முன்னணி நிறுவனங்களுடன் 1010 மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,31,571 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 34 லட்சம் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன, எதிர்க்கட்சி தலைவர் தொழில் துறையில் அரசியல் செய்ய நினைப்பது சரியல்ல. தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுப்புணர்வுடன் இவ்வகாரத்தை அணுக வேண்டும்" என்று கூறினார்.