தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.9.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து, அக்குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:-
இனிமேல், நீங்கள் கவலைப்பட வேண்டாம்! உங்களை இன்னும் கவனித்துக் கொள்ளத்தான் இந்த அன்புக் கரங்கள் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். நான் இருக்கிறேன்… உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்!
இன்றைக்கு மிகவும் முக்கியமான நாள்! பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள்! நம்முடைய தாய் நிலத்துக்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் அவருடைய பிறந்த நாள்! “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்று திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள்!
இன்று, இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, இங்கு பேசிய குழந்தைகளின் சிரிப்பு தான் அண்ணா அவர்களுக்கு நாங்கள் செலுத்துகின்ற மரியாதை. மிகுந்த மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன்!
திராவிட மாடல் என்றால் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று எளிமையாக விளக்கம் சொல்லிவிடலாம். ஆனால், எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல!
இந்திய சமூகச் சூழலில், இவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது - தெரியக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சிதான், திராவிட இயக்கம்! அதனால்தான், மக்களோடு மக்களாக, மக்களுடைய குரலாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது!
மக்களுடைய தேவைகளை, இந்த சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை, ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி இன்றைக்கு நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்! அரசியல் என்பது மக்கள் பணி! அது கடுமையான பணி! எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை!
நீங்களே பார்த்துக் கொண்டிருப்பீர்கள். காலையில் ஒரு இடத்தில் மக்கள்கூட பேசிக் கொண்டிருப்பேன். ஈவினிங் பல நூறு கிலோமீட்டர் கடந்து இன்னொரு ஊரில்… இன்னொரு பகுதியில் மக்கள்கூட இருப்பேன். இந்த உழைப்பைத்தான், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், எங்களுக்கு கற்றுத் கொடுத்திருக்கிறார்கள். இப்படி எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கின்ற காரணத்தால்தான், கடைக்கோடி மனிதருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து எங்களால் செய்ய முடிகிறது!
அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம்; பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்; சில கவர்ச்சித் திட்டங்களை செய்தோம்; மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய அடிப்படையே, “பதவி அல்ல; பொறுப்பு” தான்! அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது!
இன்றைக்கு, தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அன்புக்கரங்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். இதனால், 6,082 குழந்தைகளுக்கு, மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப் போகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?
காலையில் பள்ளிக்கு பசியுடன் வர குழந்தையின் வேதனையைப் பார்த்தேன். காலை உணவுத் திட்டத்தை உருவாக்கினேன். இன்றைக்கு, 21 இலட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடாக, சுவையாக சத்தான உணவை பரிமாறுகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?
சமூகத்தின் விளிம்பு நிலையில், எண்ணிக்கையில் சில நூறு - சில ஆயிரம் மட்டுமே இருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் - திருநர்கள் ஆகியோருக்கும் பார்த்துப் பார்த்துத் திட்டங்களை செயல்படுத்துகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?
இன்னும் சொல்கிறேன்… நம்முடைய திராவிட மாடல் அரசு, என்ன மாதிரியான நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது! ஏராளமான உயிர்கள் பறிபோனது. பலருடைய தொழில்கள் எல்லாம் முடங்கிப் போனது. பல குடும்பங்கள் தங்களுடைய முதுகெலும்பை இழந்து, பலவீனப்பட்டது. உடனே, இந்தியாவுக்கே முன்மாதிரி அரசாக, கொரோனாவால் பெற்றோரை இழந்த 15 ஆயிரத்து 775 குழந்தைகளுக்கு, 511 கோடியே 27 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை.
கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் என்று 2021-ல் ஆயிரத்து 148 குழந்தைகள் - 2022-ல் ஆயிரத்து 112 குழந்தைகள் - 2023-ல் ஆயிரத்து 12 குழந்தைகள் என்று, மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கினோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை.
அரசு சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கின்ற ஆயிரத்து நானூறு பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் வழங்குகிறோம். இதென்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை.
சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் இருக்கின்ற ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க, அனைத்து சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களையும், தாய்ப்பால் வங்கியுடன் இணைத்திருக்கிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை.
இப்படி ஏராளமான திட்டங்களை, முன்னெடுப்புகளை எங்களால் பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே இருக்க முடியும்!
இதற்கும் வாக்கரசியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வாக்கு என்பது, மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்! அந்த நம்பிக்கையை பெறும், கொள்கையும், செயல்திட்டமும், உழைப்பும், எங்களிடம் இருக்கிறது!
அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கை கொடுத்து மேலே தூக்கி விடுவதற்கான வாய்ப்பு! அந்தக் கையாகத்தான் என்னுடைய கை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்! அப்படிதான், இருந்து கொண்டிருக்கிறது! பெற்றோர் வேலைக்கு செல்கிறார்கள் என்று, குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகிறோம்.
பெற்றோரே இல்லாத குழந்தைகளை, சிங்கிள் பேரண்ட் இருக்கின்ற குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் வந்தது. அந்த அடிப்படையில் உருவானதுதான், இந்த அன்புக்கரங்கள் திட்டம்!
இந்தத் திட்டத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களிடம் சொல்லி, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் - பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் கைவிடப்பட்ட குழந்தைகள் - பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருப்பவரின் குழந்தைகள் - பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், அவர்களுடைய குழந்தைகள் - பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அவர்களுடைய குழந்தைகள் என்று கணக்கெடுக்கச் சொன்னோம்.
அப்படி முதல்கட்டமாக கண்டறியப்பட்ட 6,082 குழந்தைகளுக்கும், பள்ளி படிப்பை முடிக்கின்ற வரைக்கும் இனிமேல் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்திடுவோம்!
உங்களுக்கு 18 வயது ஆகின்ற வரைக்கும், நீங்கள் கல்வியை தொடர இந்த உதவித்தொகை வழங்கப்படும்! நீங்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்!
நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி வரவேண்டும்! இதுதான் என்னுடைய விருப்பம்; எங்களுடைய இலட்சியம்! இந்த இலட்சியத்துக்கு துணையாகும் நம்முடைய திராவிட மாடல் அரசின் கரம்தான், அன்புக்கரம்!
நாளைக்கு நீங்கள் படித்து, டாக்டராக - என்ஜினியராக - சயிண்டிஸ்டாக - ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக - அரசியல்வாதியாக உயர்ந்து, இந்தச் சமூகத்துக்கு, இந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்!
உங்களுடைய வெற்றி, தமிழ்நாட்டின் ஹிஸ்ட்டரியை சொல்லவேண்டும்! அதற்கு உங்களுக்கு சப்போர்ட்டாக, உங்கள் ஃபிரண்டாக, உங்கள் பேரண்ட்டாக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்! இருப்பேன்!