டெட் ( TET- Teachers Eligibility Test ) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராகப் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், ஆசிரியர்கள் பணி விவகாரம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் எனத் தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் எனத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிறுபான்மை நிறுவனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்பது குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் கொண்ட உயர் அமர்வுக்கு வழக்கை பரிந்துரைப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.