முத்தமிழறிஞர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ’போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் சென்னையில் 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ”ஆகஸ்ட் என்றால் சுதந்திர தினம்தான் முன்பு எல்லோருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் தற்போது ஆகஸ்ட் 7 என்ற தேதி தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீங்காத நாளாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் முதன்மை மாநிலமாக உள்ளது. இப்படிப்பட்ட தமிழ்நாட்டை கட்டமைத்து எங்கும் நிறைந்து இருக்கிறார் கலைஞர்." என புகழாரம் சூட்டியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,”சம்பாதித்ததை காப்போம், சம்மந்திகளை மீட்போம் என்ற வகையில்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு பயணம் இருக்கிறது. வாக்கு திருட்டு குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறார் பழனிச்சாமி.” என தெரிவித்துள்ளார்.