நாட்டில் பணப்புழக்கம் எவ்வளவு உள்ளது என்றும், பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட திட்டம் உள்ளதா என்றும் ஒன்றிய அரசிடம் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கிரிராஜன் கேள்வி எழுப்பினார்.
ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் நாட்டின் ரொக்க இருப்பு மற்றும் பணப்புழக்கத்தின் நிலை என்ன? பணப்புழக்கத்தின் பயன்பாட்டை ஒன்றிய அரசு கட்டுப்படுத்திகிறதா? புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 37 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டதா? பொதுமக்களிடம் பணப்புழக்கம் பெருமளவில் அதிகரிக்க காரணம் என்ன? குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட திட்டம் உள்ளதா? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஒன்றிய அரசின் நிதி அமைச்சரிடம் திமுக எம்.பி. இரா.கிரிராஜன் கேள்வி எழுப்பி இருந்தார்.
கிரிராஜனின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விவரங்களின்படி அதனிடமுள்ள மொத்த கையிருப்பு ரூ.49,23,705 கோடியாக உள்ளது என்றும், பணப்புழக்கத்தின் மதிப்பு ரூ. 38,20,866 கோடியாக உள்ளது என்றும், பொதுமக்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. 37,22,292 கோடியும், வங்கிகளில் உள்ள வைப்புத்தொகையின் மதிப்பு ரூ. 2,43,46,478 கோடியும் சேர்ந்த பொதுமக்களின் பணத்தின் மதிப்பு ரூ. 2,81,77,467 கோடி என்றும் பதில் அளித்துள்ளார்.
மேலும், வெளிப்படையான, திறமையான, கட்டுப்பாடான நிதி சூழலை உருவாக்கும் முயற்சியில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு ரொக்கப் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், வருமான வரிச் சட்டம், 1961 சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தங்களை அரசாங்கம் செய்துள்ளதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஜூன் 27ஆம் தேதி அறிக்கையின்படி,ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், டிஜிட்டல் ரூபாய் ஆகியவை சேர்த்து ரூ.38,20,866 கோடி அளவிற்கு புழக்கத்தில் இருப்பதாகவும் விவரத்தை வழங்கியுள்ளார்.
குறைந்த மதிப்புள்ள 10, 20, 50 ரூபாய் நோட்டுகளுக்கான தேவை என்பது ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை இணைப்பதன் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், அவற்றை அச்சிடுவது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசித்து, முடிவெடுப்பதாக, திமுக எம்.பி.கிரிராஜனின் கேள்விக்கு இணை அமைச்சர் பதில் அளித்துள்ளாரர்.