துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22.7.2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ. மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், இவ்விழாவில் மாணவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட உடற்கல்வி ஆசிரியர் வளநூல் எனும் புத்தகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் குறுவட்டம், மாவட்டம், மாநில அளவில் மாணவ, மாணவிகளுக்கு 14, 17, 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் மொத்தம் 26 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான 46 வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.
2024 – 2025 ஆம் கல்வியாண்டில் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 76 தங்கம், 26 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 126 பதக்கங்களை வென்றுள்ளனர்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 348 தங்கம், 236 வெள்ளி, 333 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 917 பதக்கங்களை வென்றுள்ளனர்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 1,484 தங்கம், 1,522 வெள்ளி, 1,739 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 4,745 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இவர்களுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.