தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜுலை 18ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக இனிக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 31.10.2021ஆம் நாளன்று அறிவிக்கப்பட்டு தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இவ்வாண்டு தமிழ்நாடு நாள் விழா 18.07.2025 அன்று சென்னை, திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் அரங்கம், முத்தமிழ்ப் பேரவை மன்றத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் வரவேற்புரையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., முன்னிலையுரையும் ஆற்றவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மரு.ஜெ. இராஜமூர்த்தி அவர்களின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. “பேரறிஞர் அண்ணாவும் தமிழும்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்களும், “இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு” என்ற தலைப்பில் கலைமாமணி தேச மங்கையர்க்கரசி அவர்களும், “இமய நெற்றியில் எழுதுக தமிழ்நாடு” என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களும், “தமிழ்நாடு என்றால் தனியின்பம் தானே” என்ற தலைப்பில் ரேகா மணி அவர்களும் கருத்துரையாற்ற உள்ளனர்.
தென் சென்னை மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் அவர்கள் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாமக்கல் மாவட்டம் மா. அப்ரின் என்ற மாணவிக்கு ரூ.50,000/-க்கான காசோலை; பாராட்டுச் சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற திருப்பத்தூர் மாவட்டம் கி.க. ஜெயஸ்ரீ என்ற மாணவிக்கு ரூ.30,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் மூன்றாம் பரிசு பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் இ.மேகதர்ஷினி என்ற மாணவிக்கு ரூ.20,000/-க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும்;
பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாமக்கல் மாவட்டம் பெ. ஜீவகனி என்ற மாணவனுக்கு ரூ.50,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம் இர. முத்து மீனாட்சி என்ற மாணவிக்கு ரூ.30,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் மூன்றாம் பரிசு பெற்ற திருநெல்வேலி மாவட்டம் ல. ஹரிஹர சுதன் என்ற மாணவனுக்கு ரூ.20,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் வழங்கியும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணை வழங்கி விழாப் பேருரையாற்ற உள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திருமதி கு.ப. சத்தியபிரியா அவர்கள் நன்றியுரை ஆற்றவுள்ளார்.