கரூரில் 18,332ஆயிரம் பொதுமக்களுக்கு ரூ.163 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 13,124 பொதுமக்களுக்கு பட்டா - கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணைகள் - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் - மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.
மேலும், இந்த விழாவில் கரூர் மாவட்டத்தில் ரூ.58.23 கோடி மதிப்பில் நிறைவுபெற்ற 13 பணிகளை திறந்து வைத்தார். காவிரி மீட்புக் குழுவின் உறுப்பினர் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த சி.முத்துசாமி அவர்களின் திருவுருவச்சிலை அமைப்பது உட்பட ரூ.3.35 கோடி மதிப்பிலான 3 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”கரூர் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்று 13,124 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. கழக அரசு ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் 18 லட்சத்து 30 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
விடியல் பயணம் திட்டத்தின் கீழ் இந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 730 பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் 11 கோடியே 19 லட்சம் பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் விடியல் பயணம் திட்டத்தின் வெற்றி.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 22 மாதங்கள் உரிமைத் தொகையை வழங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கும் விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.