சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதாக முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுது.
முதற்கட்டமாக கோயம்பேடு -ஆலந்தூர் இடையே இந்த சேவை தொடங்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் -விம்கோநகர் , சென்ட்ரல் -பரங்கிமலை வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் 118.9 கி.மீ தொலைவுக்கு 63,246 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் முழுமை பெற்றால் சென்னையின் போக்குவரத்துக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கடந்த ஏப்ரல் வரை 39 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.