தமிழ்நாடு

தியாக தீரர்கள் - தமிழ் அறிஞர்கள் - தலைவர்களை பறைசாற்றும் திராவிட மாடல்! : தமிழ்நாடு அரசு புகழாரம்!

2011-2021 ஆகிய 10 ஆண்டு கால முந்தைய ஆட்சியில்  25 தியாகிகளுக்கு மட்டுமே சிலைகள் அமைக்கப்பட்டன. திராவிட மாடல் ஆட்சியில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்கள் - அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தியாக தீரர்கள் - தமிழ் அறிஞர்கள் - தலைவர்களை பறைசாற்றும் திராவிட மாடல்! : தமிழ்நாடு அரசு புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காகவும், இனிய தமிழ் மொழிக்காகவும் தியாகங்கள் புரிந்த தீரர்கள்,அறிஞர்கள், தலைவர்கள் அனைவரையும் போற்றி நான்கு ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்கள்- அரங்கங்கள் அமைத்து  28 சிலைகளும் 12 அரங்கங்களும்  அமைக்கும் பணிகளை மேற்கொண்டு இந்திய நாட்டிற்கே வழிகாட்டுகிறார். ஆனால், 2011-2021 ஆகிய 10 ஆண்டு கால முந்தைய ஆட்சியில்  25 தியாகிகளுக்கு மட்டுமே சிலைகள் அமைக்கப்பட்டன

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகளில் சிறந்த பணி பல்லாயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, தென்கோடி குமரி முனையில் அய்யன் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரம், 7000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை 9 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவி, புத்தாயிரம் ஆண்டு தொடங்கிய 2000, ஜனவரி-1 அன்று திறந்து வைத்த திருப்பணியாகும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அய்யன் திருவள்ளுவர்சிலை போல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் நிறுவி  தியாகிகளைப் போற்றியுள்ளார்கள்.

பேரறிவுச் சிலை 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் வெள்ளி விழாவை 30.12.2024, 31.12.2024 ஆகிய இரண்டு நாள்கள் மாபெரும் கலை விழாவாகக் கொண்டாடினார்கள்.

அய்யன் திருவள்ளுவன் சிலையை, “பேரறிவுச் சிலை” எனப் போற்றி மகிழ்ந்தார்கள். அறிஞர் பெருமக்களின் எழுத்தாவணங்களைத் தொகுத்து வெள்ளி விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார்கள். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அய்யன் திருவள்ளுவரின் பேரறிவுச் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைத்து ரூ. 37 கோடி செலவில் இந்தியாவிலேயே முதலாவதாகக் கடல் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தை 30.12.2024 அன்று திறந்து வைத்தார்கள்.            

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், திராவிட மாடல் ஆட்சியைப் பார்முழுதும் பாராட்டும் வண்ணம் நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய இந்தியத் திருநாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள். அன்னைத் தமிழ்  மொழியைக் காத்திட ஆருயிர்கள் தந்து போராடிய அற்புதத் தியாகிகள் அனைவரையும் போற்றிப் பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாகச்  சிலைகளையும், மணிமண்டபங்களையும் தமிழ்நாடு முழுவதிலும்  ஏராளமாக ஏற்படுத்தி வருகிறார்கள்.

இவை அனைத்தும் எதிர்காலத் தலைமுறை இளைஞர்களுக்கு நல்வழி காட்டி உணர்வூட்டும் உயிரோவியங்களாகும். அவற்றுள் சில. . .

உத்தமர் காந்தியடிகள் திருவுருவச் சிலை

15.8.2022 அன்று எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலை!

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை

28.5.2022 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு,  சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூபாய் ஒரு கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவியுள்ள திருவுருவச் சிலை!

அண்ணல் அம்பேத்கர் சிலை

27.10.2022 அன்று சென்னை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் நிறுவியுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை!

நாவலர் நெடுஞ்செழியன் சிலை

26.12.2021 அன்று  நடமாடும் பல்கலைக் கழகம் எனப் போற்றப்பட்ட நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், மார்பளவு வெண்கலச் சிலை!

பேராசிரியர் க.அன்பழகனார் சிலை

10.8.2023 அன்று சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு  37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்துள்ள திருவுருவச் சிலை!

டி.பி.ஐ  வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனார் பள்ளி கல்வி வளாகம் என பெயர் சூட்டி நிறுவியுள்ள பேராசிரியர் அவர்களின் முழு உருவச் சிலை ஆகிய சிலைகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

தியாக தீரர்கள் - தமிழ் அறிஞர்கள் - தலைவர்களை பறைசாற்றும் திராவிட மாடல்! : தமிழ்நாடு அரசு புகழாரம்!

கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை 

தென் தமிழ்நாட்டு பாசனத்திற்கு உயிர் தந்த முல்லை பெரியாறு அணை கட்டிட தம் வாழ்வின் வளம் முழுவதையும் தியாகம் செய்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் இங்கிலாந்து நாட்டில் அவர் பிறந்த கேம்பெர்லி நகரில் அவருக்கு ரூ. 33,65,000 செலவில் மார்பளவுச் சிலை அமைத்து அதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களை அனுப்பி 10.9.2022 அன்று திறந்து வைத்தார்கள்!

கி.ராஜநாராயணன் நினைவரங்கம்

2.12.2022 அன்று  கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா.என்னும் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு கோவில்பட்டியில் ஒரு கோடியே 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் நினைவரங்கம்.

வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம்

11.12.2022 அன்று உத்தரப்பிரதேச மாநிலம், காசியில்  மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நினைவில்லமாக்கப்பட்டு அங்கு ரூபாய் 18,67,500 செலவில் பாரதியாரின் மார்பளவுச் சிலை!

அல்லாள இளைய நாயகர் சிலை

28.1.2023 அன்று நாமக்கல்   ஜேடர்பாளையத்தில் ரூபாய் 26 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில், அல்லாள இளைய நாயகர் அவர்களுக்கு, குவிமாடத்துடன் (Dome) கூடிய திருவுருவச் சிலை

பெருங்காம நல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம்

14.2.2023 அன்று பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சார்ந்த 16 தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில் 1 கோடியே 47 இலட்சம் செலவில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம்

கிண்டி காந்திமண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட சிலைகள்

14.2.2023 அன்று வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரர்கள், வ.உ.சி,. ஆகியோருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலைகள்.

செக்கிழுத்த  செம்மல் வ.உ.சி,  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைகள்

10.5.2023 அன்று கோவை  வ.உ.சி. பூங்காவில்  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு ரூபாய் 40 இலட்சம் செலவிலும், மயிலாடுதுறையில் பெண் சமூகச் சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு ரூபாய் 15 இலட்சத்து 97 ஆயிரத்து 669  செலவிலும் புதுக்கோட்டையில்  சமூகச் சீர்திருத்த வேங்கை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு 9 இலட்சத்து 84 ஆயிரத்து 650 ரூபாய்ச் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள  திருவுருவச் சிலைகள்.

டி.எம்.சௌந்தரராஜன் சிலை

16.8.2023 அன்று திரைப்படப் பின்னணிப் பாடகர் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு 46 இலட்சத்து 68,453 ரூபாய் செலவில் மதுரையில்  திருவுருவச் சிலை.

ப.சுப்பராயன் சிலை 5.9.2023 அன்று  டாக்டர் ப.சுப்பராயன் அவர்களுக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை.

இரவீந்தரநாத் தாகூர் சிலை

8.9.2023 அன்று சென்னை இராணி மேரி கல்லூரி வளாகத்தில் 29 இலட்சத்து 61,694  ரூபாய்  மதிப்பீட்டில் வங்கக் கவி இரவீந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலை.

அப்துல்கலாம் சிலை

15.10.2023 அன்று சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 21 இலட்சத்து 95,799 ரூபாய் மதிப்பீட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சிலை.

அஞ்சலை அம்மாள் சிலை

2.11.2023 அன்று கடலூர் மாநகராட்சி முதுநகர் காந்தி பூங்காவில் 25  இலட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலை.

ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்

15.11.2023 அன்று தூத்துக்குடி மாநகரில் ரூபாய்  100 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மக்களுக்குக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்த நகராட்சி தலைவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு 77 இலட்சத்து 87,343 மதிப்பீட்டில் குவி மாடத்துடன் கூடிய சிலை !

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை

27.11.2023 அன்று சமூகநீதிக் காவலர் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னை மாநிலக் கல்லூரியில் 52 இலட்சத்து 20,000 ரூபாய்ச் செலவில் திருவுருவச்சிலை.

அயோத்திதாச பண்டிதர் சிலையுடன் மணிமண்டபம்

1.12.2023 அன்று சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திராவிடப் போரொளி அயோத்திதாச பண்டிதர் அவர்களுக்கு 2 கோடியே  48 இலட்சத்து 75,859 ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்.

வீரமாமுனிவர் சிலையுடன் மணிமண்டபம்

 22.1.2024  அன்று தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டியில், “தமிழகராதியின்  தந்தை” எனப் புகழ் படைத்த வீரமாமுனிவருக்கு,  1 கோடி மதிப்பீட்டில் சிலையுடன் மணிமண்டபம்.

நாமக்கல் கவிஞர் சிலை

22.1.2024 அன்று நாமக்கல் நகரில் நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு, அவரது நினைவில்லத்தில்20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  மார்பளவுச் சிலை.

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்

26.2.2024 அன்று பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில்”கலைஞர் உலகம்” எனும் அருங்காட்சியகத்துடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம்.

பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்கள்

27.2.2024 அன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு 1 கோடியே 48 இலட்சத்து 22,829 ரூபாய் மதிப்பீட்டிலும், நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு 77 இலட்சத்து 62,004 ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்க் கலை உலகில் ஏழிசை மன்னர் எனப் புகழப்பட்ட எம்.கே.தியாகராஜபாகவதர் அவர்களுக்கு 79 இலட்சத்து 39 ஆயிரத்து 122 ரூபாய் மதிப்பீட்டிலும் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் ஆகிய அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

தியாக தீரர்கள் - தமிழ் அறிஞர்கள் - தலைவர்களை பறைசாற்றும் திராவிட மாடல்! : தமிழ்நாடு அரசு புகழாரம்!

இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் தங்கோ - டாக்டர் மு.வ. வீரன் சுந்தரலிங்கம் சிலைகள்

27.2.2024  அன்று செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் 2 கோடியே 17 இலட்சத்து 74 ஆயிரத்து 909 ரூபாய் மதிப்பீட்டில்  திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையையும்;

இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டையில் தமிழறிஞர் டாக்டர்.மு.வரதராசனார் அவர்களுக்கு 65 இலட்சத்து 76,562 ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையையும், தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மார்பளவுச் சிலையை மாற்றி, 48 இலட்சத்து  66 ஆயிரத்து 383 ரூபாய் மதிப்பீட்டில் வீரன் சுந்தரலிங்கம் குதிரையில் அமர்ந்து போர் புரிவது போன்ற கம்பீரத் தோற்றத்துடன் கூடிய புதிய சிலை ஆகியவற்றை எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடி அவர்களின் திருவுருவச் சிலை 

சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டம், விசுவநாதப்பேரியில் வெண்ணி காலாடி அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையையும்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி அவர்களின் திருவுருவச் சிலை 

சிவகங்கை வட்டம், இராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய்க்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையையும்

சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம்

சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்கள் நாயக்கர் அவர்கள் வீரத்தைப் போற்றி 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் அவர்களின் திருவுருவச் சிலையையும், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.10.2024 அன்று திறந்து வைத்தார்கள்.

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா- பெரியார் நினைவகம் 

கேரள மாநிலம் வைக்கம் நகரில் தீண்டாமைக்கு எதிராகத் தந்தை பெரியார் அவர்கள் தலைமை ஏற்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் வைக்கத்தில்  உள்ள தந்தை பெரியார் நினைவிடம் 8 கோடியே 14 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதிய நூலகம் ஒன்றும் கட்டப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் 12.12.2024 அன்று திறந்து வைத்தார்கள். 

உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் திருவுருவச் சிலை 

கொங்கு மண்டலத்தில் இரண்டு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெரும் கீழ் பவானி பாசன திட்டத்தின் காரண கர்த்தா- சுதந்திர போராட்ட வீரர் உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் தியாகம் போற்றி சத்தியமங்கலம் முடுக்கன்துறை  கிராமத்தில் அவர் பெயரிலான அரங்கமும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்காவில் திருவுருவச்  சிலையும் ரூ. 3,04,02,295 செலவில் அமைக்கப்பட்டு 20.12.2024 அன்று முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 

வாளுக்கு வேலி அம்பலம் திருவுருவச் சிலை 

வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர் மருது பாண்டியர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய மாவீரன் வாளுக்கு வேலி அம்பலம் திருவுருவச்  சிலை சிவகங்கை மாவட்டம் நகரப்பட்டி கிராமத்தில் ரூ. 50,00,000 செலவில் அமைக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 22.1.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.  

21 சமூக நீதிப்  போராளிகள் மணிமண்டபம் 

1987 ஆம் ஆண்டு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி, வட தமிழ்நாட்டில்  நடைபெற்ற சமூக நீதி போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப்  பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகங்களைப்  போற்றி, அவர்களின் சிலைகளுடன் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் ரூ. 5.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபதையும்; 

முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி சிலையுடன் நினைவகம் 

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அன்பைப் பெற்று அவர்களுடைய அமைச்சரவைகளில் வேளாண் துறை அமைச்சராக விளங்கியதுடன் ஏழை எளியோரின் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றி எளிமையான வாழ்வு வாழ்ந்து மறைந்த பெருந்தகை ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு ரூ. 4 கோடி செலவில் அதே விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் திருவுருவச் சிலையுடன் கட்டப்பட்டுள்ள நினைவகத்தையும் 28.1.2025 அன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள். 

சர். ஜான். ஹுபர்ட்  மார்ஷல் 

இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி, சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஆங்கிலேயப் பேரறிஞர் சர். ஜான். ஹுபர்ட்  மார்ஷல் திருவுருவச் சிலை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ. 49,84,869 செலவில் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் 13.3.25 அன்று திறந்து வைக்கப்பட்டது. 

இப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் திறந்து வைக்கப்பட்டுள்ள தியாகப் பெருமக்களின் சிலைகள் மணி மண்டபங்களுடன் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் நடைபெற்ற போது உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவு மண்டபம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்திற்காக பாடுபட்ட பெருந்தலைவர் காமராசர், மேனாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோர் திருவுருவச் சிலைகளுடன்;

பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கம், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் நவணி தொட்டக்கூர்பட்டி கிராமத்தில் சென்னை மாகாண மேனாள் முதலமைச்சர் டாக்டர். ப.சுப்பராயன் நினைவு அரங்கம், தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு மயிலாடுதுறையில் திருவுருவச் சிலையுடன் அரங்கம், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இன்னுயிர் ஈந்த தியாகி கொடிகாத்த குமரன் திருவுருவச் சிலையுடன் அரங்கம்;

இந்தி திணிப்பை எதிர்த்து அன்னை தமிழ் மொழிக்காக முதன் முதலில் தீயில் கருகி உயிர்த் தியாகம் செய்த சிங்கத் தமிழன் சின்னச்சாமிக்கு, அவன் பிறந்த கீழப்பழுவூரில் திருவுருவச் சிலையுடன் அரங்கம் முதலிய பல்வேறு நினைவுச் சின்னங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்து வருகிறார்கள்.

இப்படி, முதலமைச்சர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற  நாளில் இருந்து இதுநாள் வரை, நாட்டிற்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களை வருங்கால இளைஞர்கள் அறிந்து போற்றிப் பின்பற்றும் வண்ணம் 63 சிலைகள், 11 மணிமண்டபங்களை அமைத்ததுடன் மேலும் 28 தியாகிகளுக்குச் சிலைகளும் 12 அரங்கங்களும் அமைத்து வருகிறார்கள். 

 ஆனால் அ.தி.மு.க. 10 ஆண்டு கால ஆட்சியில் 25 தியாகிகளுக்கான சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன என்பது நினைவுகூரத் தக்கது. இந்த விவரங்கள், இந்திய நாட்டிற்கே வழி காட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாட்டிற்கு உழைத்த நல்லோரை எல்லாம் போற்றி வரும் மாட்சிகளை எடுத்துரைக்கும் சிறந்த சாட்சிகள் ஆகும்.

banner

Related Stories

Related Stories