டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றதாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீலை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதனடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.
அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை எனக்கூறி ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து, வீட்டை சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சீல் வைக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், வீடு சீல் வைக்கப்படவில்லை என்றும் தங்களை தொடர்பு கொள்ளாமல் கதவை திறக்க வேண்டாமென்று நோட்டீஸ் மட்டும் தான் ஒட்டப்பட்டதாக கூறினார். எனினும் நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆவணங்களை இன்று தாக்கல் செய்தனர்.தொடந்து அமலாக்க துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ,சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக சந்தேகம் இருந்தால் யாரிடமும் எந்த ஒரு இடத்திலும் சோதனை செய்ய அதிகாரம் உண்டு என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சமர்பிக்கப்பட்ட ஆவணத்திற்கும் உங்கள் வாதமும் பொறுந்தவில்லை என தெரிவித்தனர். 41 எப் ஐ ஆர்களில் இவர்களது பெயர் இருந்ததா என நீதிபதிகள் கேட்டபோது அது தேவையில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, சீல் வைத்ததை அகற்றி விடுகிறோம் அதற்கான நோட்டீசை எடுத்துவிடுகிறோம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீல் வைப்பதற்கான அதிகாரம் குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.தொடர்ந்து நீதிபதிகள் இரண்டு முப்பது மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.