ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கான நிதியை வழங்காமல் வஞ்சித்து வருவதாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் போன்ற ஒன்றிய அரசின் திட்டங்களில், ஒன்றிய அரசை காட்டிலும் மாநில அரசுகள் தான் அதிக நிதியை ஒதுக்கி வருகின்றன. இதை பல முறை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் The_Hindu ஆங்கில நாளிதழ் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீனவளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) உள்ளிட்ட திட்டங்களில் ஒன்றிய அரசை விட மாநில அரசுகள்தான் அதிக நிதியை ஒதுக்கீடு செய்வதாக ஆதாரங்களுடன் சுட்டிகாட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது.
இந்த கட்டுரையை சுட்டிக்காட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீனவளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!
படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது The Hindu நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.