தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என NDTV ஆங்கில ஊடகத்திற்கு DGP சங்கர் ஜிவால் பேட்டி அளித்துள்ளார்.
இந்த பேட்டியை குறிப்பிட்டு, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ZeroTolerance - விரைவான விசாரணை - அதிகபட்ச தண்டனை - முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் policy என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு DGP அவர்களின் நேர்காணலைப் பகிர்கிறேன்.
NCRB தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது.
அதேநேரம், POCSO குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
அச்சமின்றிப் புகாரளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைதுசெய்து தண்டனை பெற்றுத்தரமுடியும். இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம்.
ஏற்கெனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ZeroTolerance - விரைவான விசாரணை - அதிகபட்ச தண்டனை - முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் policy” என தெரிவித்துள்ளார்.