சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வசித்து வரும் ஜோசப் ராஜ்(47) என்பவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 4 கடைகளுடன் கூடிய இடம் உள்ளது. இவரின் 4 கடைகளில் ஒரு கடையில் வாடகைக்கு ஸ்டுடியோ நடத்தி வரும் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாமுண்டீஸ்வரி என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கண்ட 4 கடைகளுடன் கூடிய இடத்திற்கு பத்திரம் மற்றும் சொத்து வரி ரசீதை போலியாக தயார் செய்து, கடைகளுடன் கூடிய இடத்தை அபகரிக்கும் நோக்கில் மின்சார வாரியத்தில் ஆன்லைன் மூலம் போலி ஆவணங்களை பதிவேற்றம் செய்து மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்துள்ளார்.
இது குறித்து ஜோசப்ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் H-5 புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், சாமுண்டீஸ்வரி, சொத்து பத்திரம் மற்றும் சொத்து வரி ரசீதுகளை போலியாக தயார் செய்து மோசடி செய்தது உண்மையென தெரியவந்ததின் பேரில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சாமுண்டீஸ்வரி என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சாமுண்டீஸ்வரி மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி சாமுண்டீஸ்வரி விசாரணைக்குப் பின்னர் நேற்று (09.06.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் ஜெராக்ஸ் கடைக்கு நகலெடுக்க வருபவரின் பத்திரப்பதிவு ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்து செய்தது அம்பலமாகியுள்ளது.