சென்னை தேனாம்பேட்டை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரகம் அரங்கில் நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்பு மிகு கல்லீரல் நோய் ஆகிய நோய்களுக்கான விழிப்புணர்வு, ஆரம்பக் கட்ட பரிசோதனை மற்றும் பயிற்சி முகாம் நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி, சட்டமன்றத்தில் 118 புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு செயலாக்கபட்டு வருகிறது. அதனடிப்படையில், நாளை (ஜூன் 5) ‘வணிகர்களை தேடி மருத்துவம்’ சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2,34,76,215 பேர் பயன்பெற்றுள்ளனர். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் இந்திய முறை மருத்துவம் என அனைத்தும் அவரவர் இடங்களுக்கு சென்று மருத்துவம் அளிக்க உள்ளோம்.
குறிப்பாக, மாஸ்டர் செக்கப் என்று சொல்லக்கூடிய முழு உடல் பரிசோதனைக்கு, ரூ. 4,000 வரை அரசு மருத்துவமனையில் கூட செலவாகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள உதவும் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்,” 10 - 15 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட இருக்கிறது. இத்திட்டம், சுகாதாரத்துறையின் அனைத்து திட்டங்களுக்கும் முன்னோடி திட்டமாக விளங்கும்.
தமிழ்நாடு சுகாதாரத் துறையின் முன்னெடுப்புகளால், மாநகரப் பகுதிகளில் மட்டுமே இருந்த டயாலிசிஸ் முறை, தற்போது நகரம் மற்றும் கிராமங்களிலும் செயல்படுகிறது” என்றார்.