தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஏழை எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்றிட எண்ணற்ற சிறப்பான சமூக நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய நவீன தமிழ்நாட்டின் சிற்பு முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்த நாள் மற்றும் செம்மொழிநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலைஞரின் கரம்பற்றி பேரலையாய் எழுவோம் - தமிழ்நாடு காப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது சமூகவலைதள பதிவில், ”கோடானு கோடி கருப்பு - சிவப்பு தொண்டர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் இன்று. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்நாளை செம்மொழிநாள் என அறிவித்துள்ளார்கள்.
கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை, கலைஞர் அவர்கள் வகுத்தச் சட்டங்களும், தீட்டிய திட்டங்களும் , உருவாக்கிய கட்டமைப்புகளும் தான் இன்றைய தமிழ்நாட்டின் அடையாளம். தமிழ்நாட்டில் கலைஞர் அவர்களின் சாதனைச் சுவடுகள் பதிந்த இடங்களில் எல்லாம் 102 நிகழ்ச்சிகளை கழகம் இன்று நடத்துகிறது.
இன எதிரிகளை தமிழ்நாட்டுக்கு வெளியே நிறுத்த - துரோகிகளை வீழ்த்த, கலைஞர் அவர்கள் கற்றுத் தந்த 'அரசியல் வியூகம்' தான் பாசிசத்தையும் - அடிமைகளையும் பதற வைக்கிறது. மண்-மொழி-மானம் காத்திட மதுரை பொதுக்குழுவில் நம் கழகத்தலைவர் அறிவித்த, ‘ஓரணியில் தமிழ்நாடு' எனும் உறுப்பினர் சேர்க்கையை திறம்பட நிறைவேற்றுவதே கலைஞர் அவர்களுக்கு உடன்பிறப்புகள் நாம் அளிக்கும் உன்னதமான பிறந்த நாள் பரிசு.
2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்ல உறுதியேற்போம்!கலைஞரின் கரம்பற்றி பேரலையாய் எழுவோம் - தமிழ்நாடு காப்போம்!!” என தெரிவித்துள்ளார்.