மதுரையில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் முழு விவரம் வருமாறு:-
தீர்மானம் : 1
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!
‘உடன்பிறப்பே’ எனும் ஒற்றைச் சொல்லால் நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து அரவணைத்து அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைமை தாங்கி, சோதனைகளிலும் நெருக்கடிகளிலும் தொடர்ந்து வழிநடத்தி, இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் மாநிலக் கட்சியாக தி.மு.க.வை வலிமைமிக்க இயக்கமாக உயர்த்தியவரும், 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தவரும், பன்முக ஆற்றல் கொண்ட படைப்பாளியாக - நிர்வாகத் திறன்மிக்கவராக விளங்கியவருமான முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வழியில் நடைபெறும் திராவிட மாடல் அரசு கலைஞரின் நூற்றாண்டையொட்டி -
சென்னை கிண்டியில் “கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை”, மதுரையில் உலகத் தரத்திலான “கலைஞர் நூற்றாண்டு நூலகம்”, சென்னை கிளாம்பாக்கத்தில் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்”, மதுரையில் “முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் உலகத் தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கம்”, திருச்சியில் “முத்தமிழறிஞர் கலைஞர் புதிய பேருந்து முனையம்”
- உள்ளிட்ட பல மக்களுக்குப் பயன்தரும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், தம் அண்ணனாம் பேரறிஞர் அண்ணாவிடம் இரவலாக வாங்கிய இதயத்தைத் திரும்ப ஒப்படைத்து, அவர் அருகிலேயே கடற்கரையில் ஓய்வு கொள்ளும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு, உலகம் திரும்பிப் பார்க்கும் வகையிலான நினைவிடமும், நவீனத் தொழில்நுட்பத்திலான கலைஞர் உலகமும் அமைத்து, சிறப்பு சேர்த்திருப்பதுடன் -
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’, ஏழைகள் ஏற்றம் பெற ‘கலைஞர் கனவு இல்லம் திட்டம்’, சாதி பேதமற்ற வகையில், கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க, ‘கலைஞர் கைவினைத் திட்டம்’, கும்பகோணத்தில் அமையவுள்ள ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ - என முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் போற்றும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் அவர்கள், தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்திடக் காரணமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாகக் கொண்டாடவும் - தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகளைப் போற்றும் நிகழ்ச்சிகளை நடத்திடவும் ஆவன செய்திருப்பதற்கு இப்பொதுக்குழு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், தமிழ்நாடு முழுவதும் மாவட்டக் கழகங்கள் தொடங்கி ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட - கிளைக் கழகங்கள் வரை, “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளில்” அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி, கழகக் கொடியேற்றி எழுச்சியுடன் கொண்டாடி, மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிட இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 2
மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்!
இன்றைய இந்திய அரசியல் களத்தில் ஏறத்தாழ 60 ஆண்டுகால பொதுவாழ்வுக்குரிய கட்சித் தலைவராகவும், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தில் கழகத் தொண்டர், வட்டப் பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், மிசா சட்டத்தின்கீழ் அரசியல் கைதி, இளைஞரணி மாநில அமைப்பாளர் - செயலாளர், கழகத் துணைப் பொதுச் செயலாளர், கழகப் பொருளாளர், கழகச் செயல் தலைவர், கழகத் தலைவர் எனக் கழகத்தில் படிபடியாக வளர்ச்சி பெற்றவரும், மக்கள் பணியில் - சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் என மக்களின் ஆதரவுடன் பல்வேறு அரசியல் வளர்ச்சிப் படிக்கட்டுகளைத் தொட்டவரும் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் களங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும் வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, இந்தப் பொதுக்குழு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பேற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம் என இப்பொதுக்குழு உறுதியேற்கிறது.
தீர்மானம் : 3
இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!
திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதில் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில், பெண்களுக்குக் காவல்துறையில் பணிகள், குடும்பச் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு என்று பெண்கள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் விடுதலையுடன் வளம் பெறுவதற்கான திட்டங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் பேருந்துகளில் மகளிர், மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், திருநர்கள் ஆகியோருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், 1.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, புதுமைப் பெண் திட்டம், அரசுப் பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு, பணியாற்றும் பெண்களுக்குத் தோழி விடுதி, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்கிட 17 சிப்காட் தொழிற்சாலைப் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம், சுயஉதவிக்குழு சகோதரிகள் தயாரிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல இலவசப் பயணத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி, மகளிருக்கு ஆவின் தயாரிப்புப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை, இ-சேவை மையங்களில் 10 விழுக்காடு சேவைக் கட்டணம், மற்றும் சமூகநீதித் திட்டங்கள் போன்ற எண்ணற்ற சமூக நலத்திட்டங்களைக் கொண்டு வந்து மகளிரின் வாழ்வை மேம்படுத்தி, இந்திய அளவிலான பெண் பணியாளர்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் 42% என்கிற சாதனையையும் படைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 4
உழவர்கள் - நெசவாளர்கள் - மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்!
உழவர்கள் மீதான உண்மையான அக்கறையோடு திராவிட மாடல் அரசு செயல்படுவதால்தான், ஆட்சிப் பொறுப்பேற்றதுமே வேண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாசனப் பரப்பு அதிகரித்தும், விளைச்சல் மற்றும் கொள்முதல் ஆகியவை அதிகரித்தும் ஓராண்டை மற்றொரு ஆண்டு மிஞ்சும் வகையிலான சாதனைகளைப் படைத்தும் வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் உழவர்கள் எத்தகைய துயர்களையெல்லாம் எதிர்கொண்டார்கள் - எத்தனை எத்தனை உழவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்பதை நாடறியும். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், இயற்கை பொய்க்காத மழை பொழிவு மற்றும் திட்டங்களாலும் - முன்னெடுப்புகளாலும் - சிறந்த திட்டமிடல்களாலும் கடந்த நான்காண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து, உழவர்களின் நலனைப் பாதுகாத்திருக்கிறது. இந்த ஆண்டும், வருகின்ற ஜூன் 12-ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
இதுவரையில் வேளாண்மைக்கெனத் தனியாக 5 நிதிநிலை அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நெல் - கரும்பு - பருத்தி - எண்ணெய் வித்துகள் - பயறு வகைகள் உள்ளிட்ட அனைத்து வகை தானியங்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் வேளாண்மைக்கு ஆதாரமான நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தி, நவீன கருவிகள் வழங்கப்பட்டு, பணப் பயிர் வேளாண்மை, இயற்கை வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு என அனைத்தையும் மேம்படுத்தி சிறந்த உழவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
உழவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து நலன் காக்கும் திராவிட மாடல் அரசு நெசவாளர்களின் வாழ்விலும் வெளிச்சம் பரவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு, கரூர், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கைத்தறி - விசைத்தறி மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதுடன், இளைய தலைமுறையினரைக் கைத்தறித் தொழிலில் தொழில் முனைவோராக்கும் வகையில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அமைத்திடவும், கோ-ஆப்டெக்ஸ் மூலமாக நெசவாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், விசைத்தறி உற்பத்தித் திறனை அதிகரிக்க மின்னணுப் பலகைகள் நிறுவ மானியம் வழங்கியும், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியும், பட்டு நெசவு உற்பத்திக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தியும் மனிதர்களின் மானம் காக்கும் நெசவாளர்கள் தங்கள் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் வகையில் பல சாதனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல், தமிழ்நாடு மீனவர் நலவாரியம் வாயிலாக 19,997 பயனாளிகளுக்குப் பல்வேறு நிவாரணம் மற்றும் உதவித்தொகை திட்டங்களின்கீழ் ரூ.25.68 கோடியை வழங்கியதுடன், கடந்த நான்காண்டுகளில் 121 மீன்வள உட்கட்டமைப்புப் பணிகளுக்காக மொத்தம் ரூ.1,849 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவ மக்களுக்கான சிறப்பு மாநாட்டில் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான மீனவர் நலத்திட்டங்களை அறிவித்து அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். இப்படி, ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களைச் செயல்படுத்துகிற முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பரப்புரை செய்வோம்!
தீர்மானம் : 5
தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு!
தமிழ்மொழிக்கும் - இனத்திற்கும் - பண்பாட்டிற்கும் தொண்டாற்றிய தகைசால் தலைவர்களையும், இந்திய ஒன்றிய மக்களால் மதிக்கப்படும் தலைவர்களையும் பாராட்டிப் போற்றுவதில் தி.மு.கழக அரசே எந்நாளும் முன்னோடியாகத் திகழ்கிறது. பேரறிஞர் அண்ணா ஆட்சியில் கடற்கரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சான்றோர் சிலைகள், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் குமரி முனையில் அமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை, பல தலைவர்களுக்கான நினைவிடங்கள் - மணிமண்டபங்கள் - திருவுருவச் சிலைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு தலைவர்களின் நினைவையும் அவர்தம் புகழையும் போற்றும் விதத்தில் சிலைகளும் நினைவரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகள், சிந்துவெளி ஆய்வை வெளியிட்ட சர் ஜான் மார்ஷல் ஆகியோருக்குச் சிலை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது முழு உருவச் சிலை, கிண்டி காந்தி மண்டபத்தில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதருக்குச் சிலையுடன் மணிமண்டபம், காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி ஆகியோருக்குச் சிலைகள், உத்தரபிரதேச மாநிலம் காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் நினைவிடமாக்கப்பட்டு அவருக்கு மார்பளவுச் சிலை, வன்னிய சமுதாயத்தின் இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில், அன்றைய ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சமூகநீதித் தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் சிலைகளுடன் மணிமண்டபம், பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 14 தியாகிகளுக்கான நினைவு மண்டபம், திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்குச் சிலையுடன் அரங்கம், கடலூரில் விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை, திரு.இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலை, புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சிலை, நாமக்கல் ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகர் சிலை, திரு. டி.எம்.சௌந்திரராசன், டாக்டர் ப.சுப்பராயன், நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார், விடுதலைப் போரில் களம் கண்ட வீரமங்கை வேலுநாச்சியார், வீராங்கனை குயிலி, வீரன் சுந்தரலிங்கம், வீரன் வெண்ணி காலாடி, வீரன் வாளுக்கு வேலி அம்பலம், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கர் சிலை, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், கவியரசர் இரவீந்திரநாத் தாகூர், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், வீரமாமுனிவர், இனமானப் பேராசிரியர், நாவலர் நெடுஞ்செழியன்,
ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பலரது தியாகத்தையும் தொண்டையும் புகழையும் மதித்துப் போற்றி சிலைகளும் நினைவிடங்களும் அமைத்தததோடு, வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் புதுப்பித்து, பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளில் தமிழ் வார விழா கொண்டாடி, குமரியின் வள்ளுவ முனையில் வானுயர எழுந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை கொண்டாடிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளைத் தெரிவித்து, திராவிட மாடல் ஆட்சியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் திருவாளர்கள் பி.கே.மூக்கையா தேவர், டபிள்யூ.பி.ஏ.சௌந்திரபாண்டியனார், சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம், கே.பழனிசாமி கவுண்டர், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், மாயூரம் வேதநாயகம், பெரியவர் இளையபெருமாள், திரு.இமானுவேல் சேகரன், தோழர் ப.ஜீவானந்தம், கொடிகாத்த குமரன், மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி, அறிவியலாளர் ஜி.டி.நாயுடு, தமிழ் அச்சுத்துறையின் முன்னோடி சீகன் பால்கு, பட்டுக்கோட்டை வை.நாடிமுத்து பிள்ளை, பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா, கரூர் சி.முத்துசாமி ஆகியோருக்கான சிலைகள் மற்றும் அவர்கள் பெயரிலான நினைவிடங்கள், மாமேதை கார்ல் மார்க்ஸ், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஆகியோருக்குத் திருவுருவச் சிலைகள் என சிறப்பு செய்யும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசை வாழ்த்தி, நாடும் மொழியும் மானுட சமுதாயமும் சிறந்து வாழ, நாளும் உழைத்தவர்களின் நினைவை இப்பொதுக்குழு போற்றிப் புகழ்கிறது.
தீர்மானம் : 6
ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!
திராவிட நாயகராம் நம் கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே, மகளிர் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டத்திற்குக் கையெழுத்திட்டு, அதன் தொடர்ச்சியாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் - ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ ஏழை-நடுத்தர மக்கள் அன்றாட - அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்தும் மருந்துகளைக் குறைந்த விலையில் பெறுவதற்கேற்ற ‘முதல்வர் மருந்தகங்கள்’ போன்ற மகத்தான மருத்துவத் திட்டங்களையும், மாணவர் நலன் போற்றும் - ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ ‘நான் முதல்வன்’, ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ உள்ளிட்ட கல்விக்கான சிறப்பான திட்டங்களையும், ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியும்,10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தும் தமிழ்நாட்டின் தொழிற்புரட்சியைப் பெருக்கி, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியத்துடன் அனைத்து சமுதாய மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியும்,
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், வடசென்னை வளர்ச்சித் திட்டம் - எனத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையிலும், இந்தியாவின் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பார்த்து பின்பற்றக்கூடிய முறையிலும் திறன்மிக்க ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைத் திட்டங்களை, அவற்றால் பயன் பெற்றுள்ள மக்களிடம் எடுத்துரைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 7
தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் - இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!
மாநில இளைஞர் அணிச் செயலாளராக மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதும் கழகத்தில் புதிய இரத்தம் பாய்ச்சும் விதத்தில் பயிற்சிப் பாசறைகளை நடத்தியும், அதன் தொடர்ச்சியாக சுமார் 200 இளம் பேச்சாளர்களை உருவாக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்ட பரப்புரைகளில் பங்கேற்கச் செய்தும், தொகுதி தோறும் கலைஞர் நூலகங்கள் எனத் தற்போது வரை 100-க்கும் அதிகமான நூலகங்கள் இளைஞர் அணியால் உருவாக்கப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் பதிப்பகம் ஏற்படுத்தி அதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியீடு; இளம் பேச்சாளர்கள் பயிற்சி முகாம்கள், தொகுதிதோறும் பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டங்கள் நடத்தி வருவது; இளைஞர் அறக்கட்டளை மூலம் மாதந்தோறும் நலிந்தோர் சுமார் 15 பேர்க்குக் குறையாமல் கல்வி, மருத்துவ நிதி அளித்து உதவி வருவது, இளைஞர் அணி சார்பில் முரசொலி ஏட்டில் நாள் தோறும் ‘பாசறைப் பக்கம்’ எனும் தலைப்பில் ஒருபக்க அளவில் திராவிட இயக்க வரலாறுகளையும், கழக இலட்சியப் பயணத்தின் தியாக வரலாற்றையும் உயிரோட்டத்துடன் பதிவு செய்து வருவது போன்ற சிறப்பான பணிகளை இளைஞர் அணிச் செயலாளரான துணை முதலமைச்சர் செய்து வருகிறார்.
திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து முதலமைச்சர் அவர்களுக்குத் துணையாக நின்று, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்தை நேர்த்தியான முறையில் மேற்கொள்வதுடன், தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தி, பல்வேறு போட்டிகளை நடத்தி, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்து, வலிமைமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கி வரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் - கழகத்தின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செம்மாந்த பணிக்குத் துணை நிற்போம் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 8
ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன் வழங்குவதில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உழவர்கள் - மாணவர்கள் உள்ளிட்டோரின் கடன் தொடர்பாகக் கெடுபிடியான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஏழை-எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்காக வங்கியில் கடன் பெறுவதற்குத் தங்களிடமுள்ள தங்க நகைகளையே நம்பியுள்ள நிலையில், கடனில் உள்ள நகைகளை மறு அடகு வைப்பதற்கு முழுத் தொகையையும் கட்ட வேண்டும் என்றும், அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளின் உரிமை குறித்த ஆவணம் கட்டாயம் என்றும், தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியாவில் வாழும் ஏழை-எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகளுக்குப் பதில், அதிக வட்டி வசூலிக்கும் தனியார் முதலாளிகளுக்கு லாபம் தரக்கூடிய இந்தக் கெடுபிடிகளை, ஒன்றிய அரசு வலியுறுத்தி, ரிசர்வ் வங்கியைத் திரும்பப் பெறச் செய்து, பழைய முறையிலேயே தங்க நகைக் கடன் பெற ஆவன செய்ய வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய நிதியமைச்சர் அவர்களுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கோரிக்கையையும் - மக்களிடம் எழுந்த எதிர்ப்பையும் அடுத்து, அதிலிருந்து சற்றே பின்வாங்கியிருக்கின்றனர். ஆனாலும், ரூ.2 இலட்சத்திற்கும் மேலான கடன்களுக்கு முன்மொழியப்பட்டு விதிமுறைகள் பொருந்தும் என்றளவில் தற்போது உள்ளது. எனவே, உச்சவரம்பை நீக்கிட வேண்டும் எனவும் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்று உரிய தீர்வை வழங்கி ஏழை, நடுத்தர மக்களின் இன்னலைப் போக்கிட வேண்டும் என இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 9
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் கல்வி நிதி ரூபாய் 2,152 கோடி வழங்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரகடனப்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளார். ஒத்திசைவுப் பட்டியலிலுள்ள கல்வித்துறையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்ய நினைக்கும் ஒன்றிய அரசுக்கும் அது வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கும் எதிரான சட்டப்போராட்டத்தையும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கியிருக்கிறார். பாரபட்சமாகச் செயல்படும் ஒன்றிய அரசை இந்தப் பொதுக்குழு கண்டிக்கிறது.
அதோடு, 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய வரிவருவாய்ப் பங்கினை 41% -ஆக வழங்காமல், 33.16% மட்டுமே வழங்கும் ஒன்றிய அரசைக் கண்டிப்பதோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியபடி, வரிப் பகிர்வின் பங்கை 50%-ஆக உயர்த்திட வேண்டும் எனவும் இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது!
தீர்மானம் : 10
தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!
பள்ளிகளில் மும்மொழித் திட்டம், ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி ஆதிக்கம், ஒன்றிய அரசு நிறுவனங்களில் மாநில மொழிகளுக்கு இடமின்றி இந்தி பேசுவோரையே நியமிப்பது, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தி-சமஸ்கிருதப் பெயர்கள் என எல்லா வகையிலும் இந்தித் திணிப்பை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருவது இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மொழி - பண்பாட்டிற்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இந்தி மொழித் திணிப்பால் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் 52 மொழிகள் அழிந்து விளிம்பு நிலையில் உள்ளன என்றும், இந்தி பெல்ட்டு பகுதியில் 25 மொழிகள் அழிந்து போயின என்றும், வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 1488 கோடியும், எட்டு கோடி மக்கள் பேசும் தமிழுக்கு ரூபாய் 74 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என்றும் ஒன்றிய அரசை எதிர்த்துக் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து கண்டித்து வருகிறார்.
ஒன்றிய அரசின் 97 துறைகளில் வெறும் 16 துறைகளில் மட்டும்தான் இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. மற்ற துறைகளில் இந்தி மட்டும் ஆட்சி செய்கிறது. இந்தச் சூழலில் மேலும் இந்தித்திணிப்பை மேற்கொண்டு, மொழிச் சமத்துவத்தை அழித்து, மீண்டும் ஒரு மொழிப் போரை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இதனை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் உறுதியுடன் எதிர்த்து நின்று, தமிழை மட்டுமின்றி அந்தந்த மாநில மொழிகளின் உரிமையையும் நிலைநாட்டும் செயல்பாடுகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும். இந்தியையும் அதன் அடுத்த கட்டமாக சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசினைக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 11
கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
தமிழ்மொழி - தமிழ்ப் பண்பாடு ஆகியவை காலத்தால் முந்தையவை என்பதை அகழாய்வுகளும் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன. 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தாதிலிருந்து இரும்புப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்கிற வரலாற்று உண்மை இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகள் மூலமாக நிறுவப்பட்டிருப்பதைத் தமிழ்நாடு அரசு ஆதாரப்பூர்வமாக வெளியிட்டும்கூட, அதற்கு இந்தியப் பிரதமரோ, இந்திய தொல்லியல்துறையோ வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை.
இந்தப் பொதுக்குழு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வுகளின் அடிப்படையில் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதற்கான தரவுகள் கிடைக்கப்பெற்று அவை உலகளாவிய ஆய்வு நிலையங்கள் மூலமாகவும் நிறுவப்பட்டிருப்பதைத் தொல்லியல் துறை சார்பில் அதன் அதிகாரியாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்து ஆண்டுகளாகியும் அதனை ஏற்காமல், திருத்தங்கள் தேவை என ஒன்றிய அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருப்பது, தமிழ் மீதும் தமிழர்களின் பண்பாட்டின் மீதும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குள்ள வன்மத்தையே காட்டுகிறது. தங்களின் பொய்யான - கற்பனையான சமஸ்கிருத-சரஸ்வதி ஆற்று நாகரிகத்தை, தமிழர்களின் வைகை ஆற்று - கீழடி ஆய்வுகள் உண்மைத்தரவுகளுடன் மிஞ்சிவிட்டன என்ற காழ்ப்புணர்விலிருந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிவந்து, கீழடி ஆய்வறிக்கையை ஏற்று, இந்தியாவின் பெருமைமிகு நாகரிகமாகத் தமிழரின் நாகரிகத்தை அறிவிக்க வேண்டும் என இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கீழடி தமிழரின் தாய்மடி! பரந்துபட்ட பார்வையோடு - அறிவியல் பூர்வமாக எங்களது தொன்மையை நிறுவுகிறோம். இதில் ஆணவ - ஆதிக்க அரசியல் செய்ய நினைத்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒன்றிய பா.ஜ.க. அரசை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது!
தீர்மானம் : 12
இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு இரயில்வேக்கு என இருந்த தனி பட்ஜெட்டை ஒழித்துக் கட்டியதுடன், பல்வேறு வகையிலும் தமிழ்நாட்டிற்குரிய இரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதையும், பல இரயில்வே திட்டங்களுக்குக் குறிப்பாக, புதிய பாதை மற்றும் இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருந்ததையும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டி இருந்தன. தெற்கு இரயில்வேக்குத் தனித்தனியாக எவ்வளவு ஒதுக்கீடு என்கிற விவரம் மறைக்கப்பட்டதுடன், மறுக்கப்பட்டும் உள்ளது என்பது கண்டனத்துக்கு உரியது.
ஏற்கெனவே, சர்வே முடிந்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட ஆவடி, திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை புதிய பாதைத் திட்டம் பட்ஜெட்டில் இருந்து எடுக்கப்பட்டு சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் வெறும் ரூ. 1.5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. காட்பாடி-விழுப்புரம், கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர்-சேலம் ஆகிய மூன்று திட்டங்களுக்கும் குறைந்த நிதி ஒதுக்கீடு, திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூர், மொரப்பூர்-தருமபுரி, ஈரோடு-பழனி ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடே இல்லாத நிலை என்று தமிழ்நாட்டிற்கான இரயில்வே திட்டங்களைப் புறக்கணித்து வரும் ஒன்றிய அரசுக்கு வன்மையான கண்டனத்தை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 13
சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!
அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்வதையும், சிறுபான்மைச் சமூகங்களை அவதூறு செய்வதையும், இந்திய சமூகத்தை மதரீதியாகப் பிரிப்பதையும் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிப்பதையும் நோக்கமாக கொண்ட பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசின் வக்பு சட்டதிருத்த மசோதா நிறைவேற்றத்தை, தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். வக்பு திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டபோது, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் சட்ட விரோதப் பகுதிகளை எடுத்துரைத்து, வக்பு சட்டத் திருத்தத்தின் உள்நோக்கத்தைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதநல்லிணக்க குரல்களின் எதிர்ப்பை மீறி வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்ப்பதாகும் என்பதால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் மேலும் சில அமைப்புகள் மூலம் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. நள்ளிரவிற்குப்பின் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மறுநாள் காலையிலேயே அதனைக் கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மண்ணில், ஒரு மதத்தை மட்டும் குறி வைத்துக் கொண்டு வரப்பட்ட இச்சட்டமானது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறும் சட்ட வடிவம் என்பதாலும், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இருப்பதாலும், மதச் சுதந்திரத்தை நிராகரிக்கும் தன்மை கொண்ட, மத நல்லிணக்கத்திற்கு எதிரான இச்சட்டத்தை (The Waqf (Amendment) Act, 2025) முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 14
ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, தி.மு.க. ஆட்சியின் ஊழல் முறைகேடுகள் போல அரசியல் களத்தில் சித்தரிப்பதற்கான உள்நோக்கத்தோடு டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய அத்துமீறிய சோதனைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அமலாக்கத்துறை தன் வரம்பை மீறிச் செயல்பட்டிருப்பதைக் கண்டித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டி உத்தரவிட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதித்திருப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியல் உள்நோக்கத்துடன் தன்னிடமுள்ள விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசு அந்த ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டினாலும், அதற்கு அடிபணியாமல், “அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது” எனக் கூறி, “தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு out of control” என்று துணிச்சலுடன் கழகத் தலைவர் அவர்கள் முழங்கியுள்ளார். தி.மு.க.வை ஏற்கெனவே, பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை புறக்கணித்து விட்டு, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத - ஆட்சிக்கு வர முடியாத மாநிலங்களில், பழிவாங்கல் எண்ணத்துடன் சிறப்புப் புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை பா.ஜ.க. அரசு தனது சொந்த ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் சர்வாதிகாரப் போக்கை இப்பொதுக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 15
மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்!
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்க புனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான கைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகள் அமைத்தல், தமிழ்நாட்டின் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு எனத் திட்டமிட்ட வஞ்சகங்களும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்துதல், அரசியல் எதிரிகள் மீது வெறுப்பு பரப்புரைப் பேச்சுகளை உமிழ்தல், பொய் வழக்குகள் பாய்ச்சுதல், அரசு எந்திரங்களைச் சட்ட மீறலாகப் பயன்படுத்தி மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுத்தல், ஒன்றிய அரசின் இலஞ்ச - ஊழல்களை ஆதாரத்துடன் எதிர்த்து எழுதும், பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள், சிறை போன்ற அநீதிகளுமே தொடர்வதால், இத்தகைய சர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
தீர்மானம் : 16
மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!
ஒன்றியத்தில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு பொற்றுப்பேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடிக்கடி இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களுடைய படகுகள், தொழிற்கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டின் கடலோர மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு குறித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மீனவர்கள் நலன் காக்கும் திட்டங்களைச் செயல்படுத்தாததால், அண்மைக் காலத்தில் 40-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் உடைத்துக் கடலில் மூழ்கடித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கும் - சிறைவாசத்திற்கும் - உயிரிழப்பிற்கும் தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர்கள் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். இது குறித்து, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளதுபோல, மீனவர் பிரச்சினைகளில் தக்க கவனம் செலுத்தித் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்துத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஒன்றிய அரசு ஏற்று, கச்சத்தீவை மீட்டிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 17
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
சாதிவாரிக் கணக்கெடுப்பே, கல்வி, பொருளாதாரம் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைத்துச் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டிற்கான புள்ளிவிவரங்களாக இருப்பதால், நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதங்கள் வாயிலாகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் மூலமாகவும், பொதுக் கூட்டங்கள், மடல்கள், அறிக்கைகள் வாயிலாகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது, தி.மு.க.வின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கும், சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என்ற தி.மு.க.வின் நிலைப்பாட்டுக்கும் கிடைத்த வெற்றி என்பதை இப்பொதுக்குழு பதிவு செய்வதுடன், சாதிவாரிக்கணக்கெடுப்பு மக்களுக்குள் பிளவு மனப்பான்மையை உண்டாக்கும் என்றும், அதைச் செய்ய முடியாது என்றும் ஒன்றிய அரசு இதுவரை மறுத்து வந்ததற்கு மாறாக, தற்போது பீகார் மாநிலத் தேர்தல் உள்ளிட்டவற்றை மனதிற்கொண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தக் கணக்கெடுப்பை முறையாகவும் விரைவாகவும் முழுமையாகவும் நடத்தி மக்களுக்கு அதன் அடிப்படையில் சமூகநீதி வழங்கிடவும் - கிரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை 25 இலட்ச ரூபாயாக உயர்த்திடவும், ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் : 18
தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!
தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாட்டில் 8 தொகுதிகளைக் குறைப்பதற்கான அபாயம் உள்ளது. அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இது பாரபட்சமான அணுகுமுறையாகும். நாட்டின் நலன் கருதி மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு முறையைச் சிறப்பாகக் கடைப்பிடித்த தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுடன் மேலும் சில வட மாநிலங்களிலும் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைத்துவிட்டு, இத்திட்டத்தைச் சரிவர செயல்படுத்தாத மாநிலங்கள், அதுவும் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக உள்ள மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, ஒன்றிய அரசின் திட்டத்தைச் செயல்படுத்திய மாநில அரசுகளுக்குக் கொடுக்கக்கூடிய தண்டனையாக இருப்பதுடன், தென்னிந்திய மாநிலங்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, வடஇந்திய மாநிலங்களில் பெறும் வெற்றி மூலமே ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் ஆபத்தான போக்கிற்கும் வழிவகுப்பதாகும். இதனைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட ஒருமித்த உணர்வை வெளிப்படச் செய்ததுடன்,
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தைச் சென்னையில் சிறப்பாக நடத்தி, தொகுதி மறுவரையறை செய்வதை மேலும் 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என்பதையும், எந்தவொரு மாநிலத்திற்கும் நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்தாதவாறு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, இந்திய நாடாளுமன்றத்தில் அந்தந்த மாநிலங்களின் உரிமைக்குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்திடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை உறுதிசெய்ய ஒன்றிய பா.ஜ.க. அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 19
ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்தியும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும், தன் அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்ற அமர்வு, 10 மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்பதால் அவை ரத்து செய்யப்படுகின்றன என்றும், குடியரசுத் தலைவருக்கு அவர் மசோதாக்களை அனுப்பி வைத்தது செல்லாது என்றும், ஆளுநருக்குத் தன்னிச்சையான வீட்டோ அதிகாரம் இல்லையென்றும் தெரிவித்திருப்பதுடன், அரசியல் சாசனப் பிரிவு 142-இன்கீழ் உச்சநீதி மன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றும், இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருவதாகவும் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த மகத்தான தீர்ப்பால், தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்குக் கடிவாளம் போடப்பட்டு மாநில அரசுகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. ஆளுநரிடம் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த இந்த மகத்தான தீர்ப்புக்கான வழக்கைத் தொடுத்து வெற்றி கண்டு, மாநில உரிமைகளை நிலைநாட்டிய இந்தியாவின் ஜனநாயகக் காவலராம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 20
குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் முடிவெடுக்க வேண்டும். அப்படி முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் பேராணை (Writ) மனு தாக்கல் செய்ய முடியும் எனத் தீர்ப்பு வழங்கியது.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பே பெரியது என்பதையும், நியமனப் பதவியான ஆளுநர் பதவிக்குச் சட்டமன்ற முடிவுகளை நிறுத்தி வைக்கும் அதிகாரமில்லை என்பதையும் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காத்துள்ள இந்த மகத்தான தீர்ப்பு குறித்து, உள்நோக்கம் கொண்ட விமர்சனப் பார்வையுடன், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 21
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
ஆளுநர் அதிகாரம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கான காலக்கெடு ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினைத் தொடர்ந்து, 14 கேள்விகளை முன் வைத்து மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியதன் மூலம், உச்ச நீதிமன்றத்துடனான மோதல் போக்கிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு வழிவகுக்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஒன்றிய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்திய அரசமைப்பின் இறுதி விளக்க உரையாளரான உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை நோக்கி சவால் விடும் போக்கை ஒன்றிய அரசு கடைப்பிடிப்பதாக இப்பொதுக் குழு கருதுகிறது. அரசியல் சட்டத்துக்கு உரிய மதிப்பளித்து அதன்வழி தரப்பட்ட தீர்ப்பை மதித்து நடக்காமல், மாநிலங்களுக்குப் பிரச்சினை தரக் குடியரசுத் தலைவர் மூலம் முயற்சிக்கும் ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 22
உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!
மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனித்துவமான பண்பாடு, மொழி, வரலாறு இருக்கிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது, யு.ஜி.சி. விதிமுறைகள்படி துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பங்களிப்பை நிராகரிப்பது உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் போக்கு கல்வியைச் சீரழிக்கும் தன்மை கொண்டவையாகும். அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளுக்கு மாறாக, ஒன்றிய பா.ஜ.க. அரசு கல்வியில் பிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.
இந்நிலையில், கல்விக் கொள்கை என்பது அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த விஷயமாகும் என்றும், அதில் நீதிமன்றம் நேரடியாகக் கட்டாயப்படுத்தி தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தக் கட்டாயப்படுத்தி மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும்; அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவு மீறப்பட்டாலொழிய நாங்கள் இதில் தலையிட முடியாது என்றும் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்பதுடன், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும் என இப்பொதுக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 23
மலரட்டும் மாநில சுயாட்சி!
கூட்டாட்சித் தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வழியே மாநிலங்களுக்கான சுயாட்சித் தன்மை முழுமையாகக் கிடைக்கும்போதுதான் இந்திய ஒன்றியம் வலிமையானதாக இருக்கும் என்பதை அரசியல் சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தி.மு.க.வின் உயிர் மூச்சான - அரசியல் கொள்கையான மாநில சுயாட்சி பற்றி ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அதன் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். ‘மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்கிற கழகத்தின் முழக்கம் அரை நூற்றாண்டு கடந்த நிலையில், 1983-ஆம் ஆண்டு சர்க்காரியா தலைமையிலான ஆணையம், 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி புஞ்சி தலைமையிலான குழு ஆகியவற்றின் அறிக்கைகளைப் பெற்றும் மாநில உரிமைகள் மீட்கப்படாத நிலையில், இந்தியாவைத் தற்போது ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் மிச்சமிருக்கும் உரிமைகளைப் பறிப்பதுடன், இந்தியாவில் மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலின் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், நம் அரசியல் சட்டத்தின் கூற்றுப்படி, மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் மாநிலங்களைப் பாதுகாத்து,
தன்னாட்சி உரிமை பெற்றிடவும், உரிய நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்யவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அசோக்வர்தன் ஷெட்டி, ஐ.ஏ.எஸ் (ஓய்வு)., பேராசிரியர் மு.நாகநாதன் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக்குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் தன்னாட்சி உரிமை பெற்றிடச், சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம் மாநில சுயாட்சி கருத்தியலுக்குச் செயல் வடிவம் கொடுத்திட உயர்நிலைக் குழுவை நியமித்த தமிழ்நாடு அரசுக்கு இப்பொதுக்குழு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 24
பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்!
காலநிலை மாற்றத்தால் பருவமழைக்காலங்கள் மாறிவரும் சூழலில், கோடை மழையின் போதும், தென்மேற்குப் பருவமழையொட்டியும் பேரிடர் மீட்பு தயார்நிலைப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் அதற்கான அரசு அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி முடுக்கிவிட்டுள்ளார். கடந்த
4 ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டு மக்களைப் பாதுகாத்துள்ள திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசு பேரிடர் நிவாரண நிதியை வழங்காத நிலையிலும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கி, அவர்களைப் பாதுகாத்தார். மாண்புமிகு துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் என அனைவரும் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, அவர்கள் விரைவில் மீண்டு வரப் பணியாற்றினர். தற்போதும் முழுவீச்சுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் மாவட்ட அவசர காலச் செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு நிருவாகத்தை முடுக்கி விட்டு, மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளைச் சென்னை போன்ற மாநகரங்களில் நேரில் ஆய்வு செய்தும், களத்தில் நிற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் கழகத் தோழர்கள் நாம் உறுதுணையாக நின்று பணிபுரிய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 25
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!
“எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு! எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்!” என்றார் சொல்லாராய்ச்சித் தமிழறிஞர் - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.
பல நூற்றாண்டுகளாக அரசியல் - சமூக - பண்பாட்டுப் படையெடுப்புகள் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போதும், ஆட்சி நிர்வாகத்திற்காகப் பிற மொழிகள் தமிழர்கள் மீது படர்ந்த போதும், தன் தனித்தன்மையையும் - வளத்தையும் இழந்ததில்லை எனும் வரலாற்றுச் சிறப்பு, நம் தாய்மொழியாம் தமிழுக்கு மட்டுமே உண்டு!
தமிழ்மொழி பெற்ற இச்சிறப்பிற்கு நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் ஆற்றிய அளப்பரிய பணிகளை உலகறியும்!
இத்தகைய சிறப்பு கொண்ட தமிழர்களின் இல்லங்களில் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ப் பெயர்கள் இல்லை என்பதை இந்தப் பொதுக்குழு மிகுந்த கவலையோடும் வலியோடும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளது. “தமிழ்நாடு” என்ற நம் நிலபரப்பில் தமிழும் - தமிழ் உணர்வும் இல்லாது போக வேண்டும் என்று நினைக்கும் நம் இன எதிரிகளுக்கு இந்த கவலையும் வலியும் மகிழ்ச்சி அளிப்பதாய் அமைந்துவிடும்.
இந்த வலி மறைய வேண்டும் என்றுதான், ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்!’ என்ற இலக்கோடு நடைபோடத் தொடங்கி, தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோம்!
அதனால்தான் நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாம் பங்கேற்று வாழ்த்தும் அனைத்துத் திருமணங்களிலும், மணமக்களுக்குப் பிறந்திடும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைத்து வருகிறார். மேலும், குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கமும் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கடந்த வணிகர் நாளின்போது நடைபெற்ற வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில், ஏற்கெனவே தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டது போல், தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார்.
எனவே, தமிழை வளர்க்கவும், தமிழினத்தைக் காக்கவும், தமிழ் நாட்டைப் பேணவும், இனிவரும் காலங்களில் தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்களைச் சூட்டவும் - வணிகப் பெருமக்கள் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் எழுதவேண்டும் எனவும் இப்பொதுக்குழு அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 26
அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு!
தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியா முழுவதையும் அதிர வைத்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தின் பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய களங்கமாகும். இளம்பெண்களைச் சீரழித்த குற்றவாளிகள் அ.தி.மு.க.வில் பொறுப்பில் இருந்த நிலையில், அவர்களை அ.தி.மு.க அரசு காப்பாற்ற முயன்ற நிலையில், தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் போராட்டம் நடத்தின. பழனிசாமி அரசு, கண்துடைப்பு விசாரணை நடத்திய நிலையில், கழகமும் மற்ற அமைப்பினரும் முன்னெடுத்த கடும் போராட்டத்தின் விளைவாகவே சி.பி.ஐ. விசாரணைக்கு இவ்வழக்கு சென்றது. அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த நமது கழகத் தலைவர் அவர்கள், “நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு இதில் நிச்சயம் நியாயம் கிடைக்கும்” என உறுதி அளித்தார். கழக ஆட்சி அமைந்ததும் சி.பி.ஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசின் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு, தற்போது பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை என்கிற தீர்ப்பு வழங்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு மொத்தம் ரூபாய் 85 இலட்சம் ‘மாவட்ட சட்ட உதவி மையம்’ மூலம் நிவாரணத் தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூடுதலாக ஒவ்வொருவருக்கும் அரசு சார்பில் ரூ. 25 இலட்சம் வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் அந்தக் கட்சியினரின் ஆதரவுடன் நடந்த பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வழக்கின் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பை இந்தப் பொதுக்குழு பெரிதும் வரவேற்பதுடன், அந்த நீதியைப் பெறுவதில் உறுதியாக இருந்து, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 25 இலட்சம் கூடுதலாக வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மனித நேய நடவடிக்கைக்கும்;
சென்னையில் மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மூலம் விரைந்து விசாரணை நடத்தி, ஐந்தே மாதங்களில் நீதியைப் பெற்று தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் - தமிழ்நாடு காவல்துறைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தப் பொதுக்குழு, பாராட்டுகளையும் - நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 27
வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்!
ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் கேடயமும் ஏந்திப் போர்க்களம் காணும் தளபதியாக நம்முடைய கழகத் தலைவர், மாநில உரிமைகளுக்காக ஒன்றிய அரசுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியபடியே, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஜனநாயகக் காவலராக விளங்குவதுடன், இந்தியாவில் வேறெந்த மாநிலமும் நிறைவேற்றிடாத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன்னிறுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதி, வரி வருவாய் உள்ளிட்ட அனைத்தையும் முறையாக வழங்காமல் வஞ்சகம் செய்யும் ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வையும், அதன் பாசிச-எதேச்சாதிகாரப் போக்கு அனைத்திற்கும் துணை போய், தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததுடன்,
தற்போதும் அந்த வஞ்சகத்திற்கு முழுமையாகத் துணை போகும் அ.தி.மு.க.வையும் தமிழ்நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களில் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வஞ்சக பா.ஜ.க.வையும், துரோக அ.தி.மு.க.வையும் முழுமையாக விரட்டியடித்து, இந்தியாவின் ஜனநாயகக் காவலராம் நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்று முதல் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி, அயராது பாடுபடுவோம்! தலைவரை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க இப்பொதுக்குழு சூளுரைக்கிறது!