திராவிடம் நவீன தமிழுக்கு செய்த பணிகள் ஒரு எழுத்தாளருக்கு சிலை வைப்பதைவிட பிரமாண்டமானவை. என நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் சிலைகள் இல்லை என்ற ஜெயமோகனின் கருத்துக்கு விஞர் மனுஷ்ய புத்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் சிலைகள் இல்லை என ஜெயமோகனின் ஒரு கூற்றை ஒட்டி கடுமையான பேச்சுவார்த்தைகள் முகநூலில் நடந்துகொண்டிருக்கின்றன. திராவிடம் நவீன தமிழுக்கு செய்த பணிகள் ஒரு எழுத்தாளருக்கு சிலை வைப்பதைவிட பிரமாண்டமானவை. அதிலும் இன்றைய அரசு செய்துவருபவை இதற்குமுன்பு நடந்திராதவை.
1. பள்ளி- கல்லூரி பாடநூல்களில் நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் பரவலாக இடம்பெற்றுள்ளன.
2. சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் மதுரையில் கலைஞர் நூலகமும் தமிழ்நாட்டின் நவீன பண்பாட்டு மையங்களாக மாறியுள்ளன. இதே போன்ற பிரமாண்டமான நூலகங்கள் கோவையில் பெரியார் பெயரிலும் திருச்சியில் காமராஜர் பெயரிலும் கட்டப்பட்டு வருகின்றன.
3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள செந்தமிழ் சிற்பிகள் அரங்கில் தமிழுக்கு தொண்டாற்றிய பழந்தமிழ் அறிஞர்கள் முதல் நவீன எழுத்தாளர்கள்வரை அவர்களது படங்களும் அவர்களைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தினமும் ஏராளமானோர் அவற்றை பார்வையிடுகின்றனர்.
4. கி.ராஜநாராயணன் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதுடன் அவருக்கு மணிமண்டபமும் அமைக்கப்படுகிறது
5. கோணங்கிக்கு 5 இலட்சம் ரூபாய் விருதுத் தொகைகொண்ட இலக்கிய மாமணி விருது இந்த அரசால் வழங்கப்பட்டது.
6. இந்த அரசு மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகள்மூலம் புத்தக வாசிப்பு தமிழ்நாடு முழுக்க ஒரு பேரியக்கமாக மாறியுள்ளது. இதற்காக அரசு ஒரு பெரும் தொகையை நிதியாக ஒதுக்கி வருகிறது. அவற்றில் கணிசமான நவீன எழுத்தாளர்கள் உரையாற்ற அழைக்கப்படுகின்றனர்
7. மண்டல வாரியாக நதிகளின் பெயரில் நடத்தப்படும் இலக்கியத் திருவிழாக்களில் பெரும்பாலும் நவீன எழுத்தாளர்களே உரையாற்ற அழைக்கபடுகின்றனர்.
8. பதிப்புத்துறையின் கடைந்தெடுத்த ஊழல்பேர்வழிகளால் சீரழிக்கப்பட்ட பொது நூலகத்துறை கடந்த காலத்தில் சீரழிக்கபட்டதை மாற்றி இன்று எல்லாவிதமான பதிப்பகங்களிலும் நூல்கள் வாங்கப்படும் வகையில் புதிய நூலகக்கொள்கை வகுக்கபட்டு ஏராளமான நவீன படைப்பாளிகளின் நூல்கள் சமீபத்தில் வாங்கப்பட்டன. இந்தக் கொள்முதல் தொடர்ந்து நடைபெறுகிற இருக்கிறது.
9. இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்திடாத வகையில் உலகப் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து இந்த அரசு வந்ததிலிருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மொழிபெயர்ப்பு உரிமைகளை வாங்குவதும் விற்பதும் சிலரின் ஏகபோகமாக இருந்த நிலை மாற்றப்பட்டு அது அனைவருக்கும் ஜனநாயகப்படுத்தபட்டு உலகத்துடனான கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
10. தமிழ் படைப்புகளை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்ல பெருமளவு நிதி நல்கைகள் வழங்கப்படுகின்றன.
11. தமிழ்நாடு பாடநூல் கழகம் இன்று மிக முக்கியமான பழைய நூல்களை பதிப்பிப்பது மட்டுமல்ல, தமிழ் படைப்புகளை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்வதிலும் பெரும் பங்காற்றி வருகிறது
12. எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் அளிக்கப்பட்டு வருகின்றன
13. தமிழ்நாடு முழுக்க நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன
14. நான் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு முழுக்க முழுக்க நவீன எழுத்தாளர்களை மையமாகக்கொண்ட நிகழ்வுகளை தொடர்து நடத்தி வந்திருக்கிறேன். புதுப்பிக்கபட்ட சிற்றரங்கத்திற்கு புதுமைப்பித்தன் பெயரை இட்டோம். இதற்கான முழு ஆதரவை துறை சார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் அதிகாரிகளும் அளித்து வந்திருக்கிறார்கள்.
15. நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய இலக்கிய மலர்களை அரசின் இதழான தமிழரசு இதழ் வெளியிட்டுள்ளது.
16. கலைஞர் செம்மொழி ஆராய்ச்சி விருது பத்து இலட்ச ரூபாய் கொண்ட இந்தியாவின் உயரிய விருது. கலைஞர் சொந்த நிதியிலிருந்து வழங்கிய ஒரு கோடி ரூபாயிலிருந்து பபாஸி ஆண்டு தோறும் வழங்கிவரும் கலைஞர் விருதை சி.மோகன் உட்பட பல நவீன படைப்பாளிகள் பெற்றுள்ளனர்.
இதெல்லாம் சட்டென நினைவில் வந்தவற்றை மட்டும் எழுதுகிறேன். சில சிலைகளைக் காட்டிலும் இத்தகைய செயல்கள் ஆயிரம் மடங்கு மேலானவை. இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் கலைஞர் தமிழுக்கும் தமிழ் அடையாளத்திற்கும் செய்தவற்றை மிகப்பெரிய பட்டியலிடலாம். வள்ளுவத்தையும் சிலப்பதிகாரத்தையும் தமிழின் முகமாக மாற்றியது கலைஞரே.
திராவிடம் நவீன எழுத்தாளர்களை ஒருபோதும் விலக்கியதில்லை. கலாப்ரியா, வண்ணதாசன் போன்ற பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் திராவிட இயக்கத்தோடு நல்லுணர்வுர்களை கொண்டிருந்திருக்கின்றனர். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் பல நவீன எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்து நட்புகொண்டிருந்திருக்கின்றனர். ஒரு நவீன கவிஞனான என்னை திமுகவைத் தவிர வேறு எந்த அரசியல் இயக்கத்தால் அரவணைத்துக்கொள்ள இயலும்?
ஆனால் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் அதிகாரத்துடன் இயங்கிய உயர்சாதியினர் திராவிட இயக்கத்தால் தங்கள் சமூக அரசியல் அதிகாரம் முறிக்கபட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரு கற்பனையான வெறுப்பு அரசியலை வளர்த்துக்கொண்டனர். அதனால்தான் நான் மதிக்கும் ஞானக்கூத்தன் ’ எனக்கும் தமிழ்தான் மூச்சு அதை பிறர்மேல் விடமாட்டேன்’ என்று மொழிப்போராட்டத்தை கேலி செய்து எழுதினார். அவரது பல கவிதைகள் திராவிட அரசியல் ஒவ்வாமையை வெளிப்படுத்தின. அசோகமித்திரன் ‘ தமிழ் நாட்டில் பிராமணர்கள் ஜெர்மனியில் யூதர்கள் போல வாழ்கிறார்கள்’ என்றார். எவ்வளவு நுட்பமான எழுத்தாளர்கள்கூட எவ்வளவு அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் குறித்தோ சமூக நீதி குறித்தோ விழிப்புணர்ச்சியற்று இருந்தார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. அவர்கள் இடது சாரிகளோடு உரையாடினார்கள். ஆனால் திராவிட இயக்க பண்பாட்டு அரசியலோடு அவர்கள் உரையாடியதே இல்லை. வெறுப்பு மட்டுமே அவர்களிடம் மேலோங்கி இருந்திருக்கிறது. ஆனால் திராவிடம் தன்னளவில் நவீன இலக்கியத்தின்மீதோ இலக்கியவாதிகளின்மீதோ அத்தகைய வெறுப்பை கொண்டதில்லை. அவர்களை விலக்கியதுமில்லை. கடந்த காலத்தில் திமுகமீது கடும் வெறுப்பைக் கக்கிய ஒரு இலக்கிய ஏட்டின் ஆசிரியர்கூட தமிழ்நாடு அரசின் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றார்.
நவீன எழுத்தாளர்கள் சிலருக்கு சிலை அமைக்கவேண்டும் என்றால் அது ஒரு அரசுக்கு பெரிய விஷயம் அல்ல. தமிழுக்கு எவ்வளவோ செய்தவர்கள் இதைச் செய்யமாட்டோமா? ஒரு அரசை மதித்து முறையாக ஒரு கோரிக்கை எழுப்பபட்டால் இந்த அரசு அதைப் பரிசீலிக்கும். அதற்கு முதல் தேவை இந்த அரசு தமிழுக்கு ஆற்றும் பணிகளை பொருட்டாகக்கொண்டு ஒரு கண்ணியமான உரையாடலை அரசோடு தொடங்கவேண்டும். ஒவ்வொரு சிறு சிறு பிரச்சினைகள், அல்லது போதாமைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக ஒரு அரசின் தமிழ்ப் பணிகளை, இலக்கியப் பணிகளை நிராகரிக்கும் போக்கே பெரும்பாலன நவீன இலக்கிய வாதிகளிடம் வெளிப்படுகிறது. இது இருப்பதையும் இல்லாமலாக்கும் ஒரு முயற்சி.
நவீன இலக்கியத்திற்கான புதிய வெளிகளை இந்தத் திராவிட மாடல் அரசு மேலும் மேலும் விரிவாக்கும் என உறுதிபடக் கூறுகிறேன்.