சென்னை, கலைவாணர் அரங்கில் திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு – நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “நாடே போற்றும் தலைவரின் கரங்களால், தமிழவேள் அவர்களின் வரலாற்றை பரைசாற்றும் மலரை வெளியிடுவதன் மூலம், ஒரு வழிதோன்றலாக முன்னோர்களின் நினைவை போற்றும், பண்பாட்டு கடமையை நிறைவேற்றியுள்ளேன் என மகிழ்ச்சி அடைகிறேன்.
சமூக நீதிக்கான போர்க்குரல், சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்திய அரசியலையே நெறிப்படுத்தும் திசைக்காட்டி, எனக்கு என்றைக்கும் வழிகாட்டியாய், பாசத்திற்குரிய தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் பிடித்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை “சமூகநீதி காவலர்” என்று அழைப்பதைபோல், நமது முதலமைச்சரை “மாநில உரிமை காவலர்” என்றே நாம் அழைக்கலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய மூத்த ஊடகவியலாளர் என்.ராம், “1967ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, பேரறிஞர் அண்ணா, “சிறந்த பண்பாட்டாளர், சிறந்த கல்வியாளர், சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் பி.டி.ராஜன் அவர்கள். புதிய தி.மு.க அரசை அவர் வழிநடத்த வேண்டும்” என்றார்.
அவ்வாறு, சமூக நீதி சிந்தனைகளுடன் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக தற்போது அமைந்திருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்த ஆளுநருக்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பு என்பது இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய பரிசாக அமைந்திருக்கிறது” என்றார்.