நெல்லை பிரபல இருட்டுக்கடை உரிமையாளரான கவிதா ஹரிசிங் தம்பதியரின் மகள் கனிஷ்காவிற்கும் கோயம்புத்தூர் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் கணவர் பல்ராம்சிங் வரதட்சணையாக இருட்டு கடை உரிமத்தை எழுதி தர கோருவதாக கூறி நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா தனது தாயுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அந்த புகாரில் நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கனிஷ்கா குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தனக்கு பாஜக ஆதரவு உள்ளதாக மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று (ஏப்.21) காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென தபாலிலும் நேரிலும் சம்மன் மருமகன் பல்ராம் சிங்குக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இன்று பல்ராம் சிங் ஆஜராகவில்லை.
மாறாக பல்ராம்சிங்குக்கு ஆதரவாக கரும்பன் என்ற வழக்கறிஞர் ஆஜராகி 10 நாட்கள் அவகாசம் கேட்டு காவல் ஆய்வாளர் கோமதியிடம் மனு அளித்தார். இதுகுறித்து கரும்பன் கூறுகையில் பல்ராம்சிங் குடும்பத்தார் தொழில் நிமித்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளதால் 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.