தென்காசி மாவட்டம், புளியங்குடி நகர தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் - உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஆளுநரின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர்," ஏழை - எளிய மக்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்வதால் தான் இந்தியாவில் நம்பர் ஒன் முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். இனி 50 ஆண்டுகள், வீட்டில் இருப்பவர்களிடம் உங்கள் மகள் என்ன படிக்கிறார் என்று கேட்டால் கல்லூரி படிப்பு முடித்து இருக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மொழியை காக்கவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் திமுக தொடர்ந்து போராடி வருகிறது. பிரதமர் மோடி தமிழ் மொழி அடையாளத்தையும், தமிழினத்தின் அடையாளத்தையும் அழிக்க முயற்சிக்கிறார்.
இந்தி திணிப்பு மூலம் ஒன்றிய அரசின் துறைகளை தமிழர்களை நுழையவிடாமல் தடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் பாசிச முயற்சிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு தமிழ்நாட்டை காத்து வருகிறார். இன்று இஸ்லாமியர்கள் மீது கைவைத்துள்ள மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, நாளை கிறிஸ்தவர்களின் தனி உரிமை, சீக்கியர்களின் தனி உரிமை ஆகியவற்றில் இனி கை வைப்பார்கள். கிறிஸ்தவர்களுக்கும் சீக்கியர்களுக்கும் தான் அடுத்த குறி வைப்பார்கள். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.