தமிழ்நாடு

”சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல” : ஜக்தீப் தன்கர் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல” :  ஜக்தீப் தன்கர் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒருமாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் இனி எந்த மசோதாக்களையும் ஆளுநர்களும், குடியரசு தலைவரும் கிடப்பில் வைத்திருக்க முடியாது. ஆளுநர்களின் அடாவடித்தனத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளிவைத்துள்ளது.

இந்த உத்தரவால் கடுப்பான துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், ”மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை ஜனநாயகத்தில் இருக்க முடியாது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” என ஆணவத்துடன் பேசி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, துணை குடியரசு தலைவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொதுக் கருத்தாடலில் வலதுசாரிக் கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது ஆளுநர்கள், குடியரசுத் துணைத் தலைவர், அவ்வளவு ஏன் மாண்புமிகு குடியரசுத் தலைவர் உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.

மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும், அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல! எந்தத் தனிநபரும், அது எத்தகைய உயர்பொறுப்பில் இருப்பவரானாலும் அவர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். இதைத்தான் மாண்பமை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும். ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்தச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories