தமிழ்நாடு

”கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு” : தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ்.கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

”கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு” : தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2025 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்.13 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2 ஆவது அமர்வு இன்று தொடங்கியது.

2 ஆவது அமர்வு இக்கூட்டத் தொடரின் முதல் நாளே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் ஒன்றிய அரசு பழிவாங்குகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு.

சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டை வஞ்சிப்பதா? புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மறுப்பதா? தமிழ்நாட்டுக்கான கல்விநிதி ரூ.2000 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

அப்போது பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த, தமிழ்நாடு அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால் தற்போது, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சனை செய்கிறார்கள்” என கூறினார்.

உடனே அவையில் இருந்த தி.மு.க எம்.பிக்கள் ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டதாக நாங்கள் ஒருபோதும் சொன்னது கிடையாது என கனிமொழி எம்.பி அவையிலேயே பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்.கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான் அவர்களின் பேச்சை கண்டிக்கிறோம்.

என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பேச சொல்வதை பேசுகிறாரா? கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த துரோகத்தை மறக்க மாட்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் போராட்டம் கல்விக்கானது. மாநில மக்களின் உரிமைக்கானது. அது வெல்லும். எங்களை பொறுத்தவரை அது ஆர்.எஸ்.எஸ்.கல்விக் கொள்கை. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories