சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில் மருத்துவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதல்வர் மருந்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறக்க உள்ளார். நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் அதை குறைக்கும் விதமாக
முதல்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது. அதன் பின்னர் முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முதல்வர் மருந்தகம் திறப்பதற்க்கு 3 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது. நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மருந்துகள் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்படும். மருந்துகளை ஆய்வு செய்து தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கப்படும்.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்க இருப்பதன் வழி, 75% அளவுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். உதாரணத்திற்கு தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே கிடைக்கும்.
மாநில பட்டியலில் கல்வியும் சுகாதாரமும் இருந்தால் தான் மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் ஜெனரிக் மருந்துகளை எழுதாமல், பிராண்டட் மருந்துகளை எழுதும் முறையை பின்பற்றி வருகிறோம். ஆகவே தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய தற்போது ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கப்படுகிறது.
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது . மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எந்த ஆட்சியில் கொண்டுவந்தாலும் அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மக்கள் நலன் சார்ந்த ஒரு திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் முதல்வர் மருந்தகம் திறப்பதில் தவறு ஏதும் இல்லை" என்று தெரிவித்தார்.