மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் காளகஸ்த்திநாதபுரத்தில் ஒன்றிய அரசின் UGC வரைவறிக்கையை திரும்ப பெறக்கோரி மாணவர்களின் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது, “சர்வாதிகார போக்கொடு ஒன்றிய அரசும், ஆளுநரும் செயல்படுகின்றனர். இந்தியாவிலேயே 10 ஆம் வகுப்பு முதல் இளநிலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை அதிக மாணவர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்த வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒன்றிய அரசு புதிய வரைவு நெறிமுறைகளை மாற்றியுள்ளது. இந்த புதிய UGC வரைவு நெறிமுறை மாணவர்களை சீர்கெடுக்கும் முயற்சி. கல்வி புலமை மிக்கவர்கள் மட்டுமே துணை வேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், கல்வித்துறை சாராத பொதுத்துறையை சேர்ந்தவர்களையும் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்ற புதிய வரைவு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பிரதிநிதி துணை வேந்தர் நியமனம் செய்யும் பொறுப்பில் இல்லை. 1965-ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் போராடியதுபோல் UGC வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து மாணவர்கள் தன்னெழுச்சியாக மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் தொடரும்.” என்றார்.