சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, “தாய் திருநாட்டிற்கு, ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டும் விழாவிற்கு செல்லாமல் இருந்தால், இந்த உயிர் இருந்தால் என்ன? போனால் என்ன?” என்று கூறி, உடல்நிலை சரியில்லாத போதும் தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவிற்கு சென்றவர் பேரறிஞர் அண்ணா.
தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், அழித்தொழிக்க இன எதிரிகள் இன்னமும் திட்டம் தீட்டினாலும் அவை தமிழ் மண்ணில் எடுபடாது. மொழிப்போர் தியாகிகள் மூட்டிய அனல் இன்றும் அகலவில்லை என்பதை பாசிஸ்ட்டுகள் உணர வேண்டும்.
யுஜிசி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு, பல்கலைக்கழகங்களின் உரிமைகளை அபகரிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. நம்முடைய பாடத்திட்டத்தை சங்கி பாடத்திட்டமாக மாற்றுவது, இந்தியை திணிப்பது போன்ற நோக்கத்துடன் முழுக்க முழுக்க மாநில அரசால் கட்டமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை சுரண்ட திட்டமிடுகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. ஆனால், அதனை நாம் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
சட்டப்பேரவையில் வாக்கிங் வந்த ஒரே ஆளுநர் ரவி தான். தமிழ் மக்களுக்கு தேசிய கீதம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம் என்பது அவருக்கு தெரியவில்லை.
பாஜகவை பார்த்து அச்சப்படும் பழனிசாமி, தனது கட்சியையே காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க களத்தில் இறங்கி போராடும் இயக்கம் திமுக என்றும் குறிப்பிட்டார். 2026 தேர்தலில் 200 தொகுதிகளை வென்று வரலாறு படைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.