தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மன்றப் போட்டிகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 42 மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக 3 கல்வி அலுவலர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர். இச்சுற்றுலாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையேற்று சென்றுள்ளார்.
கல்விச்சுற்றுலாவின் ஒரு பங்காக நேற்று (டிசம்பர் 24) இரவு, சிங்கப்பூர் நாட்டில் அமைந்துள்ள Gardens by the Bay எனும் நகர்ப்புற பூங்காவை அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுடன் இணைந்து பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் இந்தப் பூங்கா 260 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1.5 மில்லியனுக்கும் அதிகமான தாவரங்களைக் கொண்டுள்ள இப்பூங்காவினை இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட்டு உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 25), சிங்கப்பூர் நாட்டின் நீடித்த நிலைத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்டவரும் முயற்சிகள் குறித்தான பல்வேறு தகவல்களை அளிக்கும் Marina Barrage பகுதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் சென்றனர்.
இது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,“Marina Barrage பார்வையின் போது சிங்கப்பூர் நாட்டின் கட்டமைப்பில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தின் செயல்பாடுகள் குறித்து கல்விசார் பயிற்றுநர்கள், மாணவர்களுக்கு விளக்கங்களை வழங்கினார்கள்” என தெரிவித்துள்ளார்.