சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை மேற்கு பகுதி 139வது வட்ட திமுக சார்பில் உதயநிதியின் உதயநாள் விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"480கோடி செலவில் 1000 படுக்கைகளோடு கூடிய மருத்துவமனை இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத உபகரணங்கள் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் உள்ளது. 2000 பேர் அளவிற்கு வெளி மாவட்டத்திலிருந்து வருகிறார்கள். கலைஞர் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றால் சைதாப்பேட்டையிலுள்ளோருக்கு பெருமை தானே.
முதியோருக்கான மருத்துவமனையில் பல்லாங்குழி , செஸ், கேரம் , யோகா என அனைத்தும் உள்ளது. இந்தியாவிலேயே முதியோருக்கான மருத்துவமனை சைதாப்பேட்டையிலுள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் உள்ளோரும் செல்கிறார்கள்.
கிண்டி கலைஞர் மருத்துமனை வளாகத்தில் விரைவில் குழந்தைகளுக்கான மருத்துவமனை, மாற்றுத்திறனாளிக்கான மருத்துவமனையும் வரவுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டதின்கீழ் நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு சிறப்பு திட்டங்கள் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
புதுமைப்பெண் திட்டத்தில் 4.82லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 1கோடியே 15 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பயன்பெறுகிறார்கள். இதனை பார்த்து பிற மாநிலங்களும் இதனை செயல்படுத்துகிறார்கள். தற்போது வரை மகளிர் விடியல் பயணம் 594 கோடி பயணங்கள் இதுவரை மேற்க்கொண்டுள்ளார்கள். இதன் மூலம் மாதம் ரூ.888 வரை மிச்சப்படுத்தபடுவதாக ஆய்வில் சொல்லியுள்ளார்கள். இது போல் பலத்திட்டங்களுள்ளன சொன்னால் நேரம் போதாது"என்று கூறினார்.