மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று (டிசம்பர் 4) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து, சந்தேகப்பட்ட, பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ் (29), தமிம் அன்சாரி முகமது ரஃபிக் ஆகிய இருவர், சுற்றுலா பயணிகளாக, மலேசியா சென்றுவிட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். அவர் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த 2 பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். இதை அடுத்து உடமைகளை சோதித்த போது, அவர்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டிகளுக்குள், சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமாக உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த அட்டைப் பெட்டிக்குள் சுமார் 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஆய்வு செய்ததோடு, கடத்தல் பயணிகள் இருவரையும் விசாரித்தனர்.
இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள், குளிர் பிரதேசமான தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில், அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். அதோடு இவைகள் மருத்துவ குணங்கள் உடையவை. எனவே மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், இவைகளை இந்தியாவுக்கு அனுமதித்தால், வெளிநாட்டு நோய்க் கிருமிகளால், நமது நாட்டில் உள்ள விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படும். நீர் நிலைகள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிக அளவில் ஏற்படும். எனவே இவைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று, சுங்க அதிகாரிகளும், ஒன்றிய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளும் முடிவு செய்தனர்.
அதோடு இந்த 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். எந்த விமான நிறுவன விமானத்தில், இவைகள் கொண்டுவரப்பட்டதோ, அதே விமான நிறுவனத்தின் விமானத்தில், சென்னையில் இருந்து, கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கவும், அதற்கான செலவுகளை, இவைகளை கடத்திக் கொண்டு வந்த 2 பயணிகளிடமும் வசூலிக்கவும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானத்தில், 5,400 அலங்கார நட்சத்திர ஆமைகளும், மலேசிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதோடு இவைகளை மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2 பயணிகளையும், சுங்க அதிகாரிகள் கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதை போல் மலேசியாவில் இருந்து வன உயிர் இனங்களை கடத்திக் கொண்டு வந்த, பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்து, சிறையில் அடைத்ததோடு, அவர் பிணையில் வெளிவர முடியாத படி, காப்பி போசா சட்டத்திலும் கைது செய்துள்ளனர். அதைப்போல் இந்த 2 கடத்தல் பயணிகள் மீதும், கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிகிறது.