வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவ. 30 ஆம் தேதி இரவு கரையை கடந்தது. இந்த புயலால் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
தமிழ்நாடு அரசு இம்மாவட்டங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து இருந்ததால் பேரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதி கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில், யாருமே எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகளை துரித படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், இடைகழிக்காடு பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மின்கம்பங்கள் வீழ்ந்ததையொட்டி, மின்கம்பங்கள் அமைத்திடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் மீட்பு பணிகளை துரித படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மண்டவாய் புதுக்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.