
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும், விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படையினர் நேற்று இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அதே போல நள்ளிரவில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடமும் இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அப்போது இந்த 3 விமானங்களில் வந்த பயணிகளில், 25 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதை அடுத்து அவர்களை வெளியில் அனுப்பாமல் நிறுத்தி வைத்து விசாரித்ததோடு, அவர்கள் உடமைகளிலும் சோதனையிடப்பட்டது. அந்த சோதனையின் போது, அவர்களில் 8 பெண் பயணிகள் உள்ளிட்ட 25 பயணிகளின் உடைமைகளில், தங்கக் கட்டிகள், தங்க பசைகள் மற்றும் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 25 பயணிகளிடம் மொத்தம் சுமார் 20 கிலோ, சுத்தமான 24 கேரட் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
மேலும், சென்னையில் உள்ள முக்கிய கடத்தல் ஆசாமிகள் சிலர், இவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி, இதைப்போல் தங்கத்தை கடத்தி வந்ததாகவும், ஒரே விமானத்தில் வந்தால், சுங்கச் சோதனையில் மொத்தமாக சிக்கி விடக்கூடாது என்பதற்காக, இதைப்போல் 3 விமானங்களில் வந்ததாகவும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த பயணிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






