சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.274.20 கோடியில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.
இப்பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் நாள் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக கடற்கரை வழியாக வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதற்கிடையில், ஒரு ஆண்டு கடந்தும் 4-வது பாதை பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால், பொது மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஆறு மாதம் தாமதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளது.
4ஆவது பாதை அமைக்கும் பணிக்கு முன்பு 120 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை துண்டிக்கப்பட்டபிறகு, 80 மின்சார ரயில்கள் சேவை இயக்கப்பட்டன. இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. சில பணிகள் முடிந்தபிறகு, முழுமையாக ரயில்சேவை தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாக சென்ட்ரல், பிராட்வே, திருவொற்றியூர், அண்ணா சதுக்கம், சென்னை கடற்கரை ரயில்நிலையம் வழியாக தினமும் 391 பேருந்துகள், அதவாது 3,000 சேவைக்கும் மேல் இயக்கி வரப்படுகிறது.